Friday, October 15, 2010

குட்டி கதைகள்

கொடுத்துப் பெறுதல்

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.


உலகத்திற்கு உப்பாய் இரு

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது


மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.
"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

Saturday, February 07, 2009

'பச்சோந்தி'க் கல்

நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"

தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"

ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.

ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.

அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.

கை மேல் பலன் கிடைத்தது !

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.
இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.
மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.
சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!


காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது

இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது.

கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். 'நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே' என்றான் அவன்.


வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.


நன்றி:  

Sunday, October 10, 2010

என்னைக் காணவில்லை





அன்புள்ள
அம்மா அப்பாவுக்கு
கண்ணுக்கு தெரிந்தாலும்
உங்கள்
கண்ணில் படாத கண்மணி
எழுதும் கண்ணீர் மடல்

 
இங்கு
என்னுடன் இருக்கும்
பெற்றோர்கள் இருந்தாலும்
அனாதைகளான அரும்புகள் நலம்
பிள்ளை பெற்றாலும்
மலடுகளான நீங்கள் நலமா ?

என்னால்
வளர்க்கப் பட்ட
பூனைக் குட்டிக்காவது
உங்கள்
அன்பு முழுமையாகக் கிடைக்கட்டும்
எனக்கு ஊட்டாத
பாலும் பிஸ்கட்டும்
அதற்காவது கிடைக்கட்டும்
அந்தப்
பூனைக்கு
என் வணக்கத்தைச் சொல்லுங்கள்


கதகதப்பான மையிருட்டில்
தொப்புள் கொடி சுவாசத்தில்
கைமடக்கி கால்மடக்கி
இல்லாத சிந்தனையிலிருந்து
மீண்டு பிறந்தபோது
வாய்விட்டு
அழுதது ஏன் தெரியுமா ?

கண்களை குத்திய
வெளிச்சத்தைக் கண்டு அல்ல
சுவாசக் கோசத்தில்
புத்தம் புதிதாக
நுழைந்த காற்றுத் தந்த
குறுகுறுப்பாலும் அல்ல

என் கண் முன்னால்
படம் எடுத்து நின்ற
கேள்வி குறியை கண்டு
அந்த குறி கேட்ட
புரியாத கேள்வியை பதிலாக்கவே
இந்த கடிதம்


உருண்டு புரண்டு
தவழ்ந்து
நடைவண்டி பழகி
விழுந்து எழுந்து
அழுது
கைதட்டி சிரித்து
உங்கள்
மடியில் கிடக்க வேண்டிய நான்
காப்பகத்தில்
ஆயா
திணிக்கும் பால் புட்டியை
முச்சுத் திணரத் திணர
உறிஞ்சி
  விட்டு
வயிற்றை
சுமக்க முடியாமல்
மல்லாந்துக் கிடக்கிறேன் 


வாய்வலிக்காத
அம்மாவின் மார்பும்
கன்னம் பதிக்க
அப்பாவின் தோளும்
கனவில் மட்டுமே
வந்து வந்து மறைகிறது
நிஜத்தில் இருந்தும்
நிழலை நேசிக்கும்
சுபாவம்
அப்போதே அரும்பி
விட்டது

அப்பா !
நீ
சின்னவனாய் இருந்தபோது
தொட்டிலில் இட்டு
ஆராரோ ஆரிராரோ
பாடி தாலாட்டினாளாம் பாட்டி
கைவீசம்மா கைவீசு
என கொஞ்சினாளாம் அத்தை
நீ
தளர்நடை பயின்று
நெஞ்சில் ஏறி கைகொட்டி
குதித்தப்போது
சங்குச் சக்கர சாமிவந்து
ஜங்கு ஜங்குன்னு ஆடுதாம்மென
சந்தம் படித்தாராம் தாத்தா
நான் தாலாட்டும் கேட்டதில்லை
தொட்டிலில் ஆடியதும் இல்லை
அத்தை முகம் பார்த்ததில்லை

தாத்தா பாட்டியென்றால்
யாரப்பா?
அவர்களுக்கும் நம்மைப் போன்ற
உருவம்தான் இருக்குமா?
அல்லது அவர்கள்
உன்பேச்சிலும் என்கனவிலும்
வந்துபோகும்
பூதங்களா பூச்சாண்டிகளா?
அம்மா !
சாணம் பூசியத்தரையில்
உடம்பெல்லாம் புழுதிப்பட
உருண்டு புரண்டு
மிட்டாய்காக அழுவாயாமே

மரப்பாச்சி பொம்மைக்கு
தலைவாரி
பூச்சூடி பொட்டிட்டு
உன்னோடு
கூடவே உறங்க வைப்பாயாமே

உன்னம்மாவின்
புடவைத் தலைப்பை கிழித்து
தாவணி போட்டு
கதவுக்கு பின்னால் பதுங்கி
நின்று சிரிப்பாயாமே

பள்ளிக்கூட
புத்தகப் பையில்
புளியங்காயும் மிளகாய்த்தூளும்
வைத்ததனால்
அடித்த ஆசிரியரை

கெட்ட வார்த்தையால் திட்டினியாமே

என்னநீ செய்தாலும்
என்பொண்ணுக்கு
குறும்பு
கொஞ்சம் ஜாஸ்தி என்று
உன்னப்பா
அணைத்துக் கொள்வாராமே

அப்பா என்றால்
அடிப்பவர் என்றுதான்
எனக்குத் தெரியும்
அவரால்
அணைக்கவும் முடியுமா?
அதுவெல்லாம்
இருக்கட்டும் அம்மா
குறும்பு குறும்பு என்கிறார்களே
அப்படியென்றால் என்ன ?

ஒருவர்
கண்ணைமூடி
எண்களை எண்ண
மற்றவரெல்லாம்
ஓடிஒளிந்துக் கொள்வது
கண்ணாமூச்சி ஆட்டமாம்
ஒருத்தர்
சட்டையை இன்னொருத்தர்

பிடித்து ஓடுவது
ரயில்வண்டி ஓட்டமாம்

ஆற்றங்கரை ஓரம்
மணலை குவித்து வைத்து
நடுவில் ஓட்டை வைத்தால்
அதுதான் வீடுகளாம்
களிமண்ணை பிசைந்து
உருட்டி விரலால்
துளையிட்டால் சட்டிப் பானைகளாம்

கருவேலம் முள்ளில்
பனையோலையை செருகினால்

காற்றாடியாம்
காகிதத்தை
மடித்து மிதக்க விட்டால்
கத்திக் கப்பலாம்

இன்னும்
என்னனென்வோ
பெயர் சொல்ல முடியாத
உல்லாச ஆட்டங்களாம்
இத்தனையையும்
நீங்கள் பார்த்திருக்கிறீர்களாமே
எனக்கு ஒருமுறை
டி.வி.யிலாவது காட்டக் கூடாதா?

இவையெல்லாம்
நிகழ்வதற்கு
பெரிய இடம் வேண்டுமே
அப்போதெல்லாம்
வீடுகளே இல்லையா?
அல்லது
எல்லோரும் மைதானத்தில்தான்
தூங்குவீர்களா

சுமைதூக்கும் தொழிலாளிக்கு
போனஸ் வேண்டுமென ஆங்கிலப்
பத்திரிக்கையில்
  கட்டுரை
எழுதியிருந்தீர்கள்
சுமப்பது சுலபம் அல்ல
பெரிய கஷ்டம்தான்

சுமைதூக்கும் எல்லோருக்கும்
போனஸ் வேண்டும் என்றால்
எனக்கும்தான் முதலில் வேண்டும்
தினம்தினம்
 நான்
சுமக்கும் புத்தகச் சுமை
அரிசி மூட்டையவிட
கனம்குறைந்ததா என்ன?
ஊரான்
கஷ்டமெல்லாம்
உன் கண்ணில் படுகிறது
உன்பிள்ளை
துன்பம்
ஏன் உனக்கு தெரியவில்லை அப்பா

தன்வீட்டை
தானே சுமக்கும்
ஆமைபோல்
என்முதுகு வளைந்து கிடக்கிறது

ஃபிரட்டும் ஜாமும்
தின்றுதின்று
வயிறும்
கல்லாகிக் கிடக்கிறது

கம்ப்யூட்டர்
 
திரையையே
பார்த்துபார்த்து
கண்களிரண்டும் பூத்துக்கிடக்கிறது

முதுகுவலி தீர
அம்மாமேல்
உருண்டு எழவேண்டும்

வயிற்றுக்
கனம்தீர
ஒருகவளம் சோறுவேண்டும்

கண்கள் குளிர
அப்பா
உன்முகத்தை பார்க்க வேண்டும்
விடுதியின்
மூட்டைப் பூச்சியும்
கொசுக்களும் இல்லாமல்
ஆசிரியையின் மிரட்டும்
முகம்காணாது
ஒரு நாளாவது
நிம்மதியாய் தூங்க வேண்டும்

ஒருநாள் கனவில்
கடற்கரை ஓரம்
கால்வலிக்க ஓடுகிறேன்

கல்லும் முள்ளும்
நிறைந்த பாதையில்
ரத்தம் சொட்டச்சொட்ட
நடக்கிறேன்

வெளிச்சம்
இல்லாத
காட்டிற்குள் அலைகிறேன்
கரடிப் புலிகளையும்
கண்டு மிரளுகிறேன்

அருவியில்
  விழுந்து
ஆற்றில் மூழ்கி
சுழலில் சிக்கி
பாறையில் மோதி
மொத்தப்படுகிறேன்

கொதிக்கும் எண்ணெய்
கொப்பரையில் கிடந்து துடிக்கிறேன்
நாலாபுறமும்

ஈட்டி நெறுங்கும்
சிறைச்சாலைக்குள் மாட்டிக் கொள்கிறேன்
வயிற்றில் பல்முளைத்த
குள்ள பூதங்கள்
என்னைத்
தூக்கிப்போட்டு பந்தாடுகின்றன

அலறலும்
அழுகையுமாய்
எதையோ
ஒன்றை நான் தேடுகிறேன்
கருவறை முதற்கொண்டு
என்னோடு இருந்த
அந்த
எதோ ஒன்றை
காணவில்லை
அது
எதுஎனவும்
எனக்குத் தெரியவில்லை
ஆயினும்
இன்னும் கடினமான
வழியிலெல்லாம்  தேடித்தேடி அலறு
கின்றேன்


தேடுவது எதுவெனத்
தெரிந்தாலாவது நிம்மதிக் கிடைக்கும்
இருண்டக் காட்டிற்குள்
குருட்டுக் கண்களுடன்
மீண்டும் மீண்டும்
முட்டிமோதி தேடுகிறேன்

திடீரென
காற்று ஒன்று வீசியது
அந்தக் காற்றில்
சிறகுகள் முளைத்த
அம்மா மாதிரி
அழகான பெண்ணொருத்தி வந்தாள்

கண்ணே!
நீ
தேடுவது தொலைத்துவிட்ட உனது
குழந்தைத்தனம் என்றாள் 

 எனக்கு இன்னும்
பத்து வயது பிறக்க வில்லை
குழந்தைப் பருவம் மாறவில்லை
அப்போது
எப்படி குழந்தைத் தனத்தை தொலைத்தேன்

நீனாகத்
தொலைக்க வில்லை
உன்னிடம் இருந்து
அதை மற்றவர்கள்
பறித்துக் கொண்டனர்
எனக்கூறி
அப்பெண்ணும்
மறைந்து விட்டாள்

அந்தக்கனவு
முடிந்து இந்தநிமிடம் வரை
யோசித்துக் கொண்டே இருக்கிறேன்
என்
குழந்தைத்தனத்தை
எப்போது எங்கு எப்படித் தொலைத்தேன்

சுற்றிவிட்ட பம்பரம்போல்
சிந்தனைச் சுழலுகிறது
வற்றிவிட்டக் குளத்திற்கு
கொக்குகள் வராததுபோல
விடையும் வரவில்லை

அதனால்தான்
இந்தக்
கடிதம் எழுதுகிறேன்

ஒருநாள்
விடிந்தும் விடியாதக்
காலைப் பொழுதில்
அட்டைப்பூச்சிப்போல்
அம்மாவை கட்டிப்பிடித்து தூங்கிய
என்னை
வலுக்கட்டாயமாய்
தூக்கி குளிக்க வைத்து
அழஅழ பாலர்வகுப்பின்
படிக்கட்டில் கொண்டு விட்டீர்களே
அப்போது
தொலைத்திருப்பேனா

தெருவில் இறங்கி

மிட்டாய் எச்சில்
முழங்கையில்
வழிய
நடந்த நேரம்
வீட்டிலிருந்து
ரைம்ஸ் படியென
இழுத்து வந்தீர்களே
அப்போதுதான்
தொலைந்திருக்குமா

புதிதாய் வாங்கிய
நாய்குட்டி பொம்மையை
பப்லுக்கு காட்ட
எடுத்துப் போகும்போது
டியூஷனுக்கு போவென
துரத்தி
  விட்டீர்களே
அப்போது
தொலைந்திருக்குமோ

நம்வீட்டுத் தோட்டத்தில்
பூத்திருந்த ரோஜாவில்
வந்து உட்கார்ந்த
வண்ணத்துப் பூச்சியை
தொட்டுப்பார்க்க ஓடி
கீழே விழுந்து
உடையெல்லாம் சேறான போது
அடித்தீர்களே
அப்போது தொலைந்திருக்குமோ 


அட!
தேவதை நான் தொலைத்ததாகச்
சொல்ல வில்லையே
யாரோ
எடுத்ததாகத் தானே சொல்லியது

அம்மா
உன்னை ஒன்று கேட்கிறேன்
கோபப்படாதே
அன்றொரு
நாள்
நீ செய்த
முந்திரி அல்வாவை
பக்கத்து வீட்டுச் சீனுவுக்கு

கொடுக்க எடுத்தபோது
திட்டி பிடுங்கிக் கொண்டாயே
அப்படி
என் குழந்தைத்தனத்தையும்
பிடுங்கி
எங்கோ மறைத்து வைத்திருக்கின்றாயோ

அப்பா
வீட்டுப்பாடம் செய்யாமல்
காந்திஜி படம்
வரைந்தபோது
அதைப் பிடுங்கி தூர எரிந்தாயே
அப்படி
இதையும் எங்கோ எரிந்துவிட்டாயோ

நீங்கள்
இருவரும் எடுக்கவில்லை என்றால்
என்
குழந்தைத்தனத்தை வேறு யார் எடுப்பார்?

உதட்டுக்குச்
சாயம்பூசி
ஒய்யாரமாய்
நடந்துவரும்
கணக்கு டீச்சரையும் கேட்டேன்
எடுத்ததற்கெல்லாம்
கம்பைத் தூக்கும்
பூகோள
வாத்தியாரையும் கேட்டேன்
அந்தப்பீஸ்
இந்தப்பீஸ் என
பணத்தையே கொத்தும்
பள்ளி நிர்வாகியையும் கேட்டேன்
எல்லாம் தெரிந்தும்
தெரியாததுபோல்
மௌனமாய்
எழுந்து நிற்கும்
பள்ளிக் கட்டிடத்தையும் கேட்டுவிட்டேன்
எல்லோரும்
மௌனமே சாதிக்கின்றனர் 

 நீங்களும்
அப்படி இருக்கலாமா
பெற்றப் பிள்ளையின்
கேள்விகளுக்கு
பதில்சொல்ல வேண்டியது
பெற்றவர்களின் கடன் அல்லவா?



 

அப்துல்கலாம் காப்பாற்றப்பட்டார்



    அரசியல்வாதிகளை பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் மிகவும் விழிப்போடு இருப்பார்கள். விழிப்புணர்வு இல்லாத அரசியல் வாதிகள் இந்தியாவின் முளை முடுக்குகளில் போய் தேடினால் கூட கிடைக்க மாட்டார்கள் இதை படிப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும். தேசிய கீதத்தை கூட தப்பு இல்லாமல் பாடத் தெரியாத அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்வா? இது என்ன இந்த ஆள் எதாவது பகல் கனவு கண்டு அது கலையாமலே பேசுகிறானா என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சுய உணர்வோடு தான் பேசுகிறேன், எழுதுகிறேன்.

எந்ததொரு விஷயத்தையும் உடனடியாக தீர்த்து விட்டால் தங்களது பிழைப்பு நடக்காது என்பதில் நமது அரசியல்வாதிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வை பற்றி தான் சொல்கிறேனே தவிர எதோ அவர்களுக்கு பொருளாதாரம் சர்வதேச பிரச்சனைகள் சாக்கடையை ஒழித்து கட்டுவது போன்றவற்றில் விழிப்புணர்வு வந்துவிட்டதாக நான் கருதியதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


                    ஒரு நாற்பது, ஐம்பது வருஷயங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் தரையை பெருக்கும் அளவிற்கு தோளில் துண்டு போட்ட உடன்பிறப்புகள் வடக்கிலிருந்து இந்திமொழி வருகிறது, தமிழ் மொழியை கொன்றுவிட்டு தான் மத்திய அரசு மறு காரியம் பார்க்கும்.  தமிழை காப்பாற்றுவதற்கு கழகத்தை விட்டால் வேறு நாதியில்லை எங்களுக்கு ஒட்டு போடுங்கள், பதவியில் அமர்ந்தோமோ இல்லையோ எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கொண்டு வந்துவிட்டு தான் மறுகாரியம் பார்ப்போம் என்றும் குதிகுதியென குதிப்பார்கள்.  கரகரப்பான கழகத்தின் பேச்சுக்கு அறிவை கடன் கொடுத்து ஒட்டுகளும் போட்டு விட்டோம்.  1967-ல் அரியனை ஏறியவர்கள்

2010 முடிய போகும் இந்த காலம் வரை தமிழக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லையென்பது வேறு விஷயம், எங்கே தமிழ், எங்கே தமிழ் என்று தேட வைத்து விட்டார்கள்.

தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்துபடுத்த தானை தலைவர்கள், தனது பேரன் பேத்திகள் ஆங்கிலத்தில் உரையாடுவது கண்டு ஆனந்த கடலில் முழ்கி தத்தளிக்கின்றனர், ஒட்டு போட்ட அருமை தமிழனோ தங்களது பிள்ளைகளின் அறிவை ஆங்கில பீடத்தில் பலிகொடுத்து விட்டு மொழியற்ற அனாதையாக ஆக போவது கூடத் தெரியாமல் செம்மொழி மாநாட்டிற்கு வண்டியேறி கொண்டிருக்கிறார்.  தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் பலநாட்டு அறிஞர்கள் வந்து நல்ல கருத்துக்களை சொல்வார்கள் அதை காதார கேட்போம் என்ற ஆசையினாலா? அல்லவே  அல்ல.  கழக கண்மணிகள் தமிழ் வளர்க்க ஊற்றி கொடுக்கும் மதுக் கோப்பைகளுக்காகவும், பிரியாணிக்காகவும் தான் எங்கள் ஊர் தமிழன் கொங்கு மண்டலம் புறப்படுகிறான்.

இந்தி தமிழகத்திற்குள் வந்தால் இங்கிருக்கும் நல்ல இயல்புகள் எல்லாம
போய்விடும்.  வடபுலத்து பண்பாரடுகள் கலச்சாரம் தமிழ் பண்பாட்டை சிதைத்துவிடும்.  தமிழ்நாட்டை தமிழன் ஆள முடியாது. தமிழ் பேசுபவர்கள் அனைவரும் இரண்டாம் தர குடிமக்களாகி  விடுவார்கள் தமிழக வளமெல்லாம் சுரண்டிக் கொண்டு போகப்பட்டு விடும்.  தமிழன் என்ற இனமே பூண்டற்று அழிந்துவிடும் என்று மேடை தோறும் பேசிய உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் தமிழனை தமிழ்மொழியை காப்பாற்ற தனிப்படை அமைப்போம் என்று நெற்றி நரம்பு புடைக்க கத்தினார்கள்.  அத்தோடு மட்டும் நின்றார்களா? இந்தி ஆதிகத்தை ஒழிக்க வேண்டுமென்றால் வடபுலத்து ஆக்கிர மிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்றால் தமிழன் தனிநாடு காண வேண்டுமென்று போர் முரசு கொட்டினார்கள்.


    தின்ணையில் படுத்தேனும் திராவிடநாடு வாங்குவோம் என்றார் ஒருவர்.  அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றார் வேறொருவர்.  தமிழன் நம்பினான் எந்த காலத்திலும் நடைபெறவே முடியாத பச்சை பொய்களை கொட்டி வித்த வியாபார தலைவர்களை இன்றும் நம்புகிறான்.  நாளையும் நம்பி ஏமாறத் தயாராக இருக்கிறான்.  ஆடுகளே வந்து கழுத்தை நீட்டி என்னை வெட்டு என்று சொல்லும் போது கசாப்பு கடைக்காரன் என்ன செய்வான்.   பாவம் மேடை பேச்சாளர்களையும், திரைப்பட நடிகர்களையும். பகல் வேடதாரர்களையும் தங்களது ரச்சகர்கள் என்று தமிழன் நினைக்கும் வரை இந்த நாடு உருப்படாது.

ராஜ்வ் காந்தி அனுப்பிய இந்திய அமைதி காப்புபடை  இலங்கையில் தமிழர்களை ரத்த சிந்த வைத்ததாம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அவமானம் படுத்தியதாம் அதனால் அந்த படை அந்நிய நாட்டில் பணி முடித்து தாயகம் திரும்பிய போது தமிழகத்தின் முதல்வராக இருந்த திருக்குவளை தந்த திருமகனார் ராணுவத்தை வரவேற்க கூட போக மறுத்தார்.  நான் இந்திய அரசியல் சானத்திற்கு கட்டுப்பட்ட முதலமைச்சர் என்பதை விட சக தமிழனின் துயரத்தில் பங்கெடுத்து கொண்ட சாதாரண தமிழனாக இருப்பதே பெருமை என்பது போல் நடந்து கொண்டார்.

இன்று இலங்கையில் தமிழ்மக்கள் அனைவரும் நயவஞ்சக முறையில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள்.  உரிமைக்கு குரல் கொடுத்த வீர மறவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு விட்டது.  லட்ச கணக்கான தமிழ் பிணங்கள் காக்கைக்கும் கழகுக்கும் இரையாக்கப்பட்டு விட்டன.  பசியாலும் நோயாலும் பண்பாடுமிக்க தமிழர்கள் மிருகங்களை விட கேவலமாக முள்வேலிகளுக்குள் அடைப்பட்டு கிடக்கிறார்கள் அமைதிப்படையை வரவேற்க மறுத்த, தமிழர்களுக்காகவே வாழ்வேன், தாழ்வேன் என்ற வீர உரையாற்றிய முதுபெரும் அரசியல் சாண்க்கியர் முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் என்று தனக்கு தானே பட்டம் வழங்கி கௌரவித்து கொண்ட தமிழகத்தின் முதல்வர் சினிமா கலை விழாக்களில் தன்னை மறந்து உறங்கி கொண்டிருக்கிறார்.
உறங்குபவனை எழுப்பாதே, அவன் அந்த நேரத்தில் மட்டுமாவது பாவம் செய்யாமல் இருப்பான் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ஆனால் கலைஞர் அவர்கள் தனக்கும், தன் குடும்பத்திற்கும் தன் பதவிக்கும்  இடைஞ்சல் வந்து விடக் கூடாது என்பதில் அக்கறையோடு இருக்கிறார்.  அந்த அக்கறையின் வெளிபாடுத் தான் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வயோதிக தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த போது ஆகாயவிமான நிலையத்திலே திருப்பியனுப்ப சாணக்கிய திட்டம் வகுத்தது.

தம்பி பிரபாகரனை வீரன், சூரன், தியாகி என்றுயெல்லாம் போற்றி புகழ்ந்தவர் விடுதலை புலிகளின் தனிநாடு கோக்கைக்கு போர் பரணி பாடியவர் புலி உறுப்பினர் இறந்த போது தனியொரு இரங்கற்பாவே  வடித்துச் கொடுத்த சங்க தமிழ்றிஞர் தனது பதவிக்காக புலிகளின் போராட்டம் நியாமற்றது என்றதையும்

சிங்கள அரசுக்க அடி பணிவதில் தவறில்லை என்றதையும் காதார கேட்ட பின்பும் தமிழர்கள் இவரை தலைவர் என்று ஏற்று கொண்டிருப்பதும் விதியின் விளையாட்டு என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது.

   இன்று கூட தமிழுக்காகவும், தமிழர்காகவும் அயராது பாடுபடுவதாக சொல்லும் கருணாநிதி நமக்காக என்ன செய்திருக்கிறார்.  என்பதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்.  கழகங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட அனைகட்டுகள் எத்தனை தரமான பாலங்கள் எத்தனை, ஆயிரகணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழில் கூடங்கள் எத்தனை, புதிய பல்கலை கழகங்கள், கல்லுரிகள், பள்ளி கூடங்கள் எத்தனை நாற்பத்தி முன்று வருடங்களில் விரல் விட்டு எண்ணி விடலாம் முன்னேற்ற திட்டங்களின் பலனை.

புண்ணுக்கு புனகு புசுவது போல் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்படுகிறதே தவிர மற்றப்படி நடப்பதெல்லாம் வெறும் கேலி கூத்துகள் தான் காமராஜன் மதிய உணவு திட்டம் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது.  அது என்னவோ பெரிய கொடைவள்ளல் தனமாக விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர உண்மையா பலன் அதில் எதுவுமில்லை கலைஞர் புதிதாக கெட்டுபோன அரிசி சாதத்தில் வாரம் இரண்டு முட்டை தருகிறார்.  அந்த முட்டை சத்துணவு பொறுப்பாளர் ஆயா மற்றும் ஆசிரியர்களின் வயிற்றை நிரம்பிய பிறகு தான் குழந்தைகளின் தட்டுகளில் வந்து விழகிறது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பெயளவில் விளம்பரம் உண்மையில் நடப்பது என்ன ஒரு ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருப்பவருக்கு தான் இலவச சலுகை அதுவும் மின்சார இணைப்பு பெற வருட கணக்கில் காத்திருக்க வேண்டும்.  அதிகாரிகளுக்கு வெல்ல கட்டிகளை கணக்கில்லாமல் கொடுத்தால் கூட விண்ணப்பம் நகராது.  மேஜைக்கு மேஜை கப்பம் கட்டி கை சலித்து போன விவசாயிகளின் எண்ணிக்கை தான் அதிகமே தவிர உடனடியாக பலன் பெற்றது ஆயிரத்தில் ஒருவர் தான்.  இலவச மின்சாரம் என்பது எல்லாம் சரி வெயில் காலத்தில் வயிலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் எங்கே வருகிறது.

மின்சார தட்டுபாடு அதனால் குறிப்பிட்ட நேரத்தில் தான் கரண்ட் வரும் என்று மின்சார இலாக்கா அறிவிக்கிறது, வருடந்தோறும் இந்த அறிவிப்பை தான் பார்க்கிறோமே தவிர மின்சார உற்பத்தியை அதிகரிக்க இவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை என்னவென்று சல்லடை போட்டு தேடினாலும் ஒன்றும்
கிடைக்கவில்லை மின்சார உற்பத்தியை தனியார் வசம் ஒப்படைக்க போகிறார்களாம்.  ஒரு அரசாங்கத்தாலேயே உற்பத்தியை அதிகக்க முடியாத போது தனியாரால் எப்படி முடியும்?  முடியும்.  தனியாரிடம் ஒப்படைத்தால் தானே இவர்களின் மிக நீண்ட சட்டைப் பை நிரம்பும் அரசாங்க உற்பத்தி செய்தால் பரதேசி மக்கள் தானே பயணடைவார்கள் தமிழ்நாட்டிற்காக உயிரையும் கொடுக்க சித்தமாக இருக்கும் இந்த உத்தமர்களுக்கு என்ன பயன்.

இவையெல்லாம் கூட கிடக்கட்டும் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக ஆட்சிக்கு வந்த இவர்கள் மொழி வளர்ச்சிக்காக செய்தது என்ன.  தமிழ் கற்பிக்கும் பள்ளி கூடங்கள் வருடத்திற்கு ஆயிரத்திற்கு மேல் முடப்படுகிறது.  தமிழை பயிற்று மொழியாக கொண்ட படித்த இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.

சட்டம், மருத்துவம், பொறியியல், கணினிதுறை போன்றவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உள்ளது,  தமிழ் குழந்தைகள் பச்சை நிற பென்சிலை எடுத்து வா என்றால் புரியாமல் விழித்து க்கிரின் (green) பென்சிலை எடு என்றால் மட்டுமே எடுக்க கூடிய அளவிற்கு மொழி தேய்ந்து கரைந்து மறைந்து கொண்டு இருக்கிறது ஆனால் செம்மொழி தகுதியை தமிழ் பெற்று விட்டது என்று பல ஆயிரம் கோடியை கழக தமிழ் ஆர்வலர்கள் சுருட்டி கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் செம்மொழி மாநாடு கோவையில் நடந்தது.  அந்த விழாவிற்கு அப்துல்கலாமல் அழைக்கப்படவில்லை என்று சில அப்பாவிகள் வருத்தப்படுகிறார்கள்.  விஞ்ஞானி ஆனாலும் கூட தமிழை மறக்காத  தூயவர் தமிழிலேயே பதவி பிராமணம் எடுத்துக் கொண்ட தலைமை குடிமகன் தமிழையும் தேசத்தையும் சுவாசமாக கொண்ட நல்லவர் தமிழக்கு செம்மொழி தகுதியை வாங்கித் தந்த உண்மை தொண்டர் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தால்.

    செவ்வாயழை தோட்டத்தில் சீட்டாடும் குரங்குகளான வாலி வைரமுத்து கூட்டத்தார்கள் இடையில், வட்டமிடும் கழகுகளான அழகிரி, தயாநிதிமாறன் கும்பலுக்கு மத்தியில், வாய்பிளந்து நிற்கும் ஒநாய்களான கனிமொழி, கயல்விழி போன்ற அரைவேக்காட்டு மேதாவிகளுக்கு இடையில் சுற்றி வளைக்கும் மலை பாம்புகளான ஸ்டாலின், ராசாத்தி அம்மாள் நெருக்குதலுக்கு இடையில் பாவம் மாட்டிக் கொண்டு திக்கு முக்காடி போயிருப்பார்,  ஜெயலலிதா இரவோடு இரவாக கலைஞரை கைது  செய்த போது ஐய்யோ காப்பாற்றுங்கள் என்று கத்தினாரே அதே போல அப்துல்கலாம் கத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நல்ல வேளை கலைஞர் புண்ணியத்தில் நல்லவர்களின் நகைப்பிற்கு இடம் தராமல் செத்து போன இலங்கை தமிழர்களின் சாபத்திற்கு ஆளாகாமல் செத்து கொண்டிருக்கும் உலக தமிழர்களின் கோபத்திற்கு இறையாகாமல் அப்துல் கலாம் காப்பாற்றப்பட்டார்.  அதுவரையில் உலக தமிழர்களின் ஒரே தலைவருக்கு நன்றி.


நன்றி : உசிலா தேவி