Thursday, September 22, 2011

"டிவிட்டர், பேஸ்புக்' உதவியை நாடுகிறது தேர்தல் கமிஷன்


ஓட்டளிப்பதன் அவசியம் பற்றி வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, "டிவிட்டர், பேஸ்புக்' ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். உள்ளாட்சி தேர்தலில், விழிப்புணர்வு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக, தமிழக தேர்தல் கமிஷனின் செயலர் சேவியர் கிறிசோ நாயகம், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தொலைத் தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்தி, ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும்படி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தேர்தலில் ஓட்டளிப்பது தொடர்பாக, தங்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வேண்டுகோள் விடுக்க முன்வந்துள்ளன. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சினிமா தியேட்டர்களில், "சிலைடு' காட்டுவதன் மூலம், தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், தட்டிகள் வைக்கலாம். மின்னஞ்சல் மூலமும், டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றின் மூலமும், வாக்காளர்களை ஓட்டளிக்கும்படி கேட்டுக் கொள்ளலாம்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லாத "டிவி'யில் இலவச விளம்பரம்!தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில வாரங்களிலேயே, உள்ளூர் சேனல்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன. இன்று வரை, எந்த மாவட்டத்திலும் உள்ளூர் சேனல் ஒளிபரப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் கமிஷன், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், உள்ளூர் சேனல்களில், இலவச விளம்பரம் செய்து கொள்ளும்படி, அறிவுறுத்தியுள்ளது. இல்லாத, "டிவி'க்களில் இலவச விளம்பரம் செய்யும்படி, தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை கண்டு, தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Monday, August 29, 2011

அதற்குள் எதற்கு அவசர அவசரமாக தூக்கு தண்டனை


nnai
அதற்குள் எதற்கு அவசர அவசரமாக தூக்கு தண்டனை
1. ராஜீவின் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் முண்டியடித்துக்கொண்டு, அவருடன் நின்று போஸ் கொடுத்து தன் கோஷ்டியை வலுப்படுத்திகொள்ளும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சரியாக குண்டு வெடிக்கும் நேரம் ராஜீவை தனியே விட்டது ஏன்? ராஜீவின் நிகழ்ச்சி நிரலில் முதலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூர், திடீரென சேர்க்கப்பட்டது ஏன்?

2. ராஜீவ் 1991 மே 21ல் கொலை செய்யப்படுகிறார். அதற்கு முந்தைய நாள் இரவு சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்பிரமணியசாமி, அவசராவசரமாக டெல்லி செல்ல வேண்டும் என்று கூறிவிட்டுக் கிளம்பினார். ஆனால் மறுநாள் வரை அவர் டெல்லி செல்லவில்லை. இடையில் அவர் சென்றது எங்கே? சந்திராசாமியை சென்னையில் சந்தித்ததாகவும், இருவரும் பெங்களூர் சென்றதாகவும் ஜெயின் கமிசனில் எழுந்த குற்றச்சாட்டுக்கு இன்று வரை சுவாமி பதிலளிக்கவில்லை. அவர்கள் பெங்களூர் சென்றது சிவராசன் குழுவினர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவா?

3. சந்திராசாமியின் பின்புலத்தில், கர்நாடக காங்கிரஸ்காரரான மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

4. ராஜீவ் கொலை நடந்தது இரவு 10.10 மணிக்கு. மூப்பனார் மற்றும் ஜெயந்தி நடராஜனால் ராஜீவ் உடல் கண்டெடுக்கப்பட்டு, அவர் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது 10.40 மணிக்கு. ஆனால் 10.25க்கு தன் கட்சிக்காரர் திருச்சி வேலுச்சாமியிடம் ஃபோனில் பேசிய சுப்பிரமணியசாமி ‘ராஜீவ் செத்துட்டார்?’ என்கிறார்.இந்தியாவில் யாருக்குமே தெரியாத அந்தத் தகவல் சுவாமிக்கு தெரிந்தது எப்படி? ஜெயின் கமிசன் விசாரணையில் இந்த விசயம் கேட்கப்பட்டபோது ‘இலங்கையில் இருந்து ஒரு நபர் தகவல் கொடுத்ததாகச் சொன்னார். அது யார், ஏன் குறிப்பாக சுவாமிக்கு தகவல் கொடுத்தனர் என்று கேட்டதற்கு பதில் இல்லை.ஏன்?

5. ’ராஜீவ் கொலை பற்றி முன்னரே சோனியாவுக்குத் தெரியும்’ என்று சுப்பிரமணியசுவாமியே ஒரு பேட்டியில் சொன்னார். மற்றவர்கள் மேல் பொடா தடா பாய்ச்சும் காங்கிரஸ், இதைக்கேட்டபின்னும் சுவாமியை ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க பயந்தது ஏன்?

6. சாதாரண குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரையே வெளிநாடு செல்ல அனுமதிக்காத அரசு, இந்த முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட சந்திராசாமி 2007ல் வெளிநாட்டுக்கு ஓட அனுமதித்தது ஏன்?

7. ஜெயின் கமிசன் ‘ சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை மேலும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லையே..ஏன்?

8. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? அமெரிக்க சி.ஐ.ஏ. ஏஜண்ட் என்று வர்ணிக்கப்படும் சுப்பிரமணிய சுவாமியின் பங்கும் இதில் உறுதிப்பட்ட நிலையில். அமெரிக்க சதி பற்றி ஏன் விசாரிக்கவில்லை? இந்திய அரசு பயந்ததா?

Wednesday, March 2, 2011

உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளையின் மரணம் தற்போது வடக்கில் என்ன நடக்கிறது என்பதை யாதொரு குழப்பமும் இல்லாமல் சொல்லிவிட்டு போயிருக்கிறது.

முற்காலங்களில் ஒரு பட்டி மன்றம் நடக்கும் இறந்தவர்களை எரிப்பது நல்லதா இல்லை புதைப்பது நல்லதா என்று.. சிறீலங்காவில் பிறந்திருந்தால் அவரை எரிப்பதே நல்லது என்று மாவீரர் புதைகுழிகள் தோண்டப்பட்ட பின்னர் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இப்போது பார்வதிப்பிள்ளையின் அஸ்தியை கிளறி எறிந்து, அதில் மூன்று சுடலை நாய்களையும் சுட்டு வீசியிருக்கிறார்கள் என்றால் எரிக்கவும் முடியாத அவலம் வந்துள்ளது என்பதே பதிலாகிறது.

நமக்குக் கறுப்புக் கொடி பிடிக்க உரிமை உண்டு, இறந்துபோன ஒருவருக்காக கட்டவுட் வைக்க உரிமையுண்டு என்று சொன்னவர்கள் எல்லாம் வாய்மூடி வாழ வேண்டும் என்ற எச்சரிக்கை இந்த நிகழ்வின் மூலம் விடப்பட்டுள்ளது. தமிழன் வாய்திறந்தால் அவன் தெரு நாயைப்போல சுடப்படுவான், அதைக் கேட்க இன்று உலகில் நாதியில்லை என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று புதுமாத்தளனிலும், முள்ளிவாய்க்காலிலும் தமிழர்கள் நாய்கள் போலச் சுடப்பட்டபோது உலகம் சும்மாதானே இருந்தது, இனி மட்டும் என்ன வாழப்போகிறது என்ற மமதை இந்தச் செயலில் தெரிகிறது.

அதோ எகிப்தில் மக்கள் மீது சுடுகிறார்கள் என்றும், இதோ லிபியாவில் 200 பேர் செத்துவிட்டார்கள் என்றும் ஓலமிடும் உலக மக்கள், .நா செயலர் யாவரும் ஈழத்தில் தமிழனுக்கு அவலம் நடந்தபோது உறைந்துதானே கிடந்தார்கள். ஓர் இலட்சம்பேர் வன்னியில் கொல்லப்பட்டபோதும் ஒன்றும் நடக்காதது போல செத்துக்கிடந்தது உலக சமுதாயம். உலகத்தில் உள்ள ஒரு நாயும் நமக்காக வராது என்ற உண்மை தெரிந்து ஈழத் தமிழனுக்காக நீதிகேட்க வந்தவை வல்வை ஊறணிச் சுடலையில் வாழ்ந்த மூன்று சுடலை நாய்களே. தமிழனுக்காக குரைத்த காரணத்தால் அவையும் சுடப்பட்டு பார்வதியம்மாவோடு எரிக்கப்பட்டுவிட்டன. நாயும் கேட்க நாதியில்லா இனம் என்ற நிலையில்தான் இன்றைய தமிழனின் அவல வாழ்வு இருக்கிறது என்ற உண்மையைப் பார்வதியம்மாவின் அஸ்த்தி .நா செயலர் பான் கி மூனுக்கு அழுத்தம் திருத்;தமாக சொல்லியுள்ளது.

நாயிற்கடையாய் கிடந்த அடியேர்க்கு அருளும் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே என்ற சிவபுராணப் பாடல் பார்வதி அம்மா சுடலையில் கிடந்தபோது கேட்டது. இப்போதோ சிவன் உறையும் சுடலையில் நாய்களே வாழ முடியாத நிலை வந்துள்ளது. தாயிற்சிறந்த தயாவான தத்துவன் வந்திருந்தாலும் அவனுக்கும் இதுதான் கெதி..!

புதுமாத்தளன் போருக்குப் பின்னர் தமிழன் வாழ்வு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கிறது என்பதே உண்மையாகும். இலங்கைத் தீவில் வாழும் தமிழர் இதுவரை எதையும் பெற்றுவிடவில்லை, ஒரு பிடி சாம்பலைக்கூட

ஒரு பிடி சாம்பலுக்கே உரிமையில்லாத நிலைக்கு உலக சமுதாயத்தால் ஆளாக்கப்பட்ட ஈழத் தமிழன் இனி..

நாம் பான் கி மூனிடமும், பக்கத்து நாட்டு பாராளும் மன்னர்களிடமும் போவதற்கும், பெறுவதற்கும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை..

பார்வதி அம்மாவிற்காக போராடி உயிர் கொடுத்த மூன்று நன்றியுள்ள நாய்களுக்கு மட்டும் சிரந்தாழ்த்தி மரியாதை செலுத்துகிறோம்.. உறங்கிக் கிடக்கும் உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் மூன்று கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை..

வெளிச்சத்துக்கு வராத போர்குற்ற சந்திப்பின் இரகசியங்கள்

இலங்கை அரசாங்கம் அனுப்பிய உயர்நிலைப் பிரதிநிதிகள் குழு .நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு ஜெனிவா கிளம்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் உச்சக்கட்ட சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கின்ற நிலையில் தான்- எதிர்பாராத இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

இந்தச் சந்திப்பு எதற்காக நடந்தது? இதில் பேசப்பட்ட விடயங்கள் என்ன? – எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? எல்லாமே மர்மமாகத் தான் உள்ளது. அதற்குக் காரணம் இது அதி உச்ச இரகசியம் பேணப்பட்ட ஒரு சந்திப்பு என்பது தான்.

இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் றொமேஷ் ஜெயசிங்கவும், சட்டமா அதிபர் மொகான் பீரிஸும் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்று நியூயோர்க்கை அடைந்த வரை இதுபற்றி வெளியே மூச்சுக் கூடவிடவில்லை.

பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா கூட அதை அறிந்திருக்கவில்லை என்கிறது ஒரு தகவல். அதனால் தான் அப்படியான சந்திப்புத் திட்டங்கள் ஏதும் கிடையாது என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் உச்ச இரகசியம் பேணப்பட்ட இந்தச் சந்திப்புத் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த விரும்பாமல் அவர் அப்படிக் கூறியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

நியூயோர்க்கில் உள்ள .நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன ஊடாகவே வழக்கமாக இலங்கை அரசுக்கான .நாவின் தகவல்கள் பரிமாறப்படும்.

ஆனால் இம்முறை நேரடியாகவே கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சைத் தொடர்பு கொண்டு, இலங்கை அரசுடன் பேச விரும்பும் தகவலைத் தெரிவித்துள்ளது.

இதனால் தான் வெளிவிவகாரச் செயலரும், சட்டமா அதிபரும் இரகசியமாக - நியூயோர்க் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்கள் நியூயோர்க் சென்றடைந்த பின்னர், சந்திப்புத் தொடர்பாக பாலித கொஹன்னவின் அலுவலகத்துக்கு .நாவில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது.

பாலித கொஹன்னவுடன் .நாவுக்கான பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.

எல்லாமே இரகசியமாகப் பேணப்பட்ட போதிலும் இன்னர் சிற்றி பிரஸ் அதை மோப்பம் பிடித்துக்கொண்டது.

நாளை சந்திப்பு நடக்கவுள்ளது' என்று அது கடந்த செவ்வாயன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அதை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நிராகரித்தார்.

அவர் அப்படிக் கூறியிருந்த போதும் மறுநாள் இன்னர் சிற்றி பிரஸ் சொன்னது போலவே சந்திப்பு நடந்தது. அந்த இரகசியச் சந்திப்பின் படங்களையும் இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாக வெளியிட அது பரகசியமானது.

ஆனாலும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட உண்மையான விடயங்கள் பல வெளிவரவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் .நாவும் சரி, இலங்கை அரசும் சரி இந்தச் சந்திப்புத் தொடர்பாக வெளியிடுகின்ற செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவே உள்ளன.

இன்னர் சிற்றி பிரஸ் படங்களுடன் சந்திப்பை அம்பலப்படுத்திய பின்னர், உடனடியாகவே இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சட்டமா அதிபரும், வெளிவிவகாரச் செயலரும் சட்ட ஆலோசனைக்காக நியூயோர்க் சென்றிருந்தனர் என்றும் அப்போதே .நா பொதுச்செயலரை சந்தித்துப் பேசியதாகவும் அந்த அறிக்கை கூறியது.

ஏதோ போன வழியில் அவரைக் கண்டு பேசியது போல அமைந்திருந்தது அந்த அறிக்கையின் சாரம். ஆனால் இந்தச் சந்திப்பு முன்னரே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று.

இந்த விடயத்தில் .நா. பொதுச்செயலரின் அழைப்பின் பேரிலேயே இலங்கை அரசு தமது பிரதிநிதிகளை அனுப்பியதாக செய்தியை வெளியானால் அது தரக்குறைவாக அமைந்து விடும் என்று அரசாங்கம் நினைத்திருக்கலாம். அல்லது இந்தச் சந்திப்பின் உண்மைப் பரிமாணங்கள் வெளிவருவதைத் தடுக்க அது விரும்பியிருக்கலாம்.

அடுத்து இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று இலங்கை அரசாங்கம் தெளிவாகக் கூறவில்லை. சட்டம் சார்ந்த விடயங்கள் குறித்துப் பேசப்பட்டது போன்று மேலோட்டமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால், .நா பொதுச்செயலரின் பேச்சாளார் மார்ட்டின் நெவ்ஸ்கி, இலங்கையில் போருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகள் தொடர்பாகவே ஆராயப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இங்கேயும் இருதரப்பும் முரண்பாடானதும், குழப்பமானதுமான தகவல்களையே வெளியிட்டன.

அதேவேளை இப்போது கிடைக்கும் தகவல்கள், இந்தச் சந்திப்பின் அடிப்படை நோக்கம் .நா நிபுணர்கள் குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாகக் கலந்துரையாடுவதே என்று கூறுகின்றன.

.நா நிபுணர்கள் குழு இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. வேண்டுமானால் அவர்கள் வந்து நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கலாம்- அதற்கு அப்பால் விசாரணை செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தது அரசாங்கம். இதன் காரணமாக இதுவரை அந்தக் குழு இலங்கை வரவில்லை.

ஆனால் .நா பொதுச்செயலரோ நிபுணர்குழு இலங்கை செல்லும், அதற்கு வழி பிறந்து விட்டது, அங்கு செல்வது பற்றி ஆராய்கிறது என்றெல்லாம் அவ்வப்போது கூறி வந்தார். ஆனாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்தக் கட்டத்தில் .நா நிபுணர்குழுவின் பணிக்காலம் முடிவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்த வாரம் அதன் அறிக்கை கையளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கையை .நா பொதுச்செயலர் பகிரங்கப்படுத்துவாரா என்பது முக்கியமான கேள்வி.

அதேவேளை இந்த அறிக்கை ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள .நா மனித உரிமைகள் பேரவையின் 16வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தநிலையில் தான் .நா பொதுச்செயலர் இலங்கை அரச பிரதிநிதிகளைப் பேச்சுக்கு அழைத்திருந்தார்.

இலங்கை அரசாங்கத்தை இராஜதந்திர வழிகளில் மிரட்டுவதற்காக அவர் இந்த அழைப்பை விடுத்தாரா அல்லது வேறேதாவது நோக்கங்கள் இருந்ததா என்பது மர்மமாகவே உள்ளது.

ஆனாலும் அரசாங்கம் அனுப்பிய குழு, நல்லிணக்க ஆணைக்குழு போற்றதக்க வகையில் செயற்படுவதாக .நா பொதுச்செயலரிடம் கூறியிருக்கிறது.

பான் கீ மூனை நம்ப வைக்கும் அளவுக்கு அது நடந்து கொண்டிருப்பதாகத் ஊடகச் செய்திகள் கசிகின்றன.

இந்தநிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு .நா பொதுச்செயலர் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாரா அல்லது தாம் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு முக்கியம் அளிக்கப்போகிறாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இந்தச் சந்திப்பின் மூலம் இலங்கை அரசு தமக்குச் சார்பான நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.

அதேவேளை, இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட முக்கியமான மூவர் பற்றிய சர்ச்சைகளும் தொடர்கின்றன.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.

அவருடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள பாலித கொஹன்னவும் .நா பொதுச்செயலரைச் சந்தித்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் .நாவின் உத்தரவாதத்தின் பேரில் சரணடைய முன்வந்த புலிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள .நா பொதுச்செயலரின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியாரும் இந்தச் சந்திப்பில் கூடவே இருந்துள்ளார்.

இவர் மீதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ச்சைகள் நிரம்பிய மனிதர்கள் மத்தியில் .நா பொதுச்செயலர் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.

அதுவும் கூட சர்ச்சைகளும், சந்தேகங்களும் நிறைந்த ஒன்றாகவே இருந்துள்ளது.

இந்தச் சந்திப்பு யாருக்கு ஆதாயம் தேடுவதற்காக நடத்தப்பட்டது என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

இலங்கை அரசுடன் முட்டி மோதி வந்த .நா பொதுச்செயலர்- தான் பணிந்து போவதற்காக இந்தச்சந்திப்பை நிகழ்த்தியிருக்கலாம். அல்லது இலங்கை அரசை மிரள வைக்கவும் அவர் இப்படியான சந்திப்பை நடத்தியிருக்கலாம்.

இப்போது இந்தச் சந்திப்புத் தொடர்பான பல இரகசியங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும் அது விரைவிலேயே வெளிச்சத்துக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நன்றி: தமிழ்மிரர்