Saturday, January 2, 2010

ஒரு தந்தையின் கடிதம்

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.


இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்
-----------------------------------------------------------------

நாம் அறிந்ததும் அறியாதவையும்: தலைவர் பிரபாகரன்

விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.

ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.

தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா…


தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”

”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!

ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ”நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”

”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச் சொல்வார்!

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

நன்றி: விகடன்

சன் பொய்கள்… அடுக்குமா இது?

சன் பொய்கள்… அடுக்குமா இது?
முன்பெல்லாம் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்பார்கள், பொய்யின் தன்மையைப் புரிய வைக்க. இனி அத்தனை சிரமப்பட வேண்டாம். சிம்பிளாக, சன்டிவி தகவல் என்று சொன்னால் போதும் போலிருக்கிறது!
ஒன்றுமில்லாத விஷயங்களை ஊதிப் பெரிதாக்குவதில் சன் டிவிக்கு நிகர் அவர்களே. இவர்களது இந்த ஸ்டைலால், இவர்கள் சொல்லும் உண்மைச் செய்திகளைக்கூட சந்தேகக் கண்கொண்டே பார்க்க வேண்டியுள்ளது.
அரசியல் ரீதியாகவும் சரி, திரைத்துறைச் செய்திகளாக இருந்தாலும் சரி, செய்திகளை இந்த சேனல் தரும் விதம் மிகுந்த எரிச்சலையும், ‘இப்படி அநியாயத்துக்கு புளுகிறார்களே’ என்ற கோபத்தையும் விஷயமறிந்த ஒவ்வொருவர் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை சென்சேஷனலாகத் தருவது, செய்தி சொல்வதில் ஒரு தனி கலைதான் என்றாலும்… வரைமுறையில்லாமல், தாங்கள் சொல்வதே உண்மை என பிடிவாதமாக தவறான தகவல்களைத் தருவது, எங்கே போய் நிறுத்துமோ என்ற அச்சம் பலர் மனதில் எழுந்துள்ளது நிஜம்.
சன்னும் ஜெயாவும் தேர்தல் முடிவு சொல்லும் விதம் இருக்கிறதே… யார் சிறந்த பொய்யர் என்ற போட்டியில் சர்வதேச விருது பெறும் அளவுக்கு தகுதிவாய்ந்த சமாச்சாரம் அது.
திமுக வெற்றி முகம் காட்டினால், லெட்டர் பேடு தலைவர்கள் முதல் பெருந்தலைகள் வரை சன் ஸ்டுடியோவில் வரிசை கட்டி நிற்பார்கள், கருத்து என்ற கருமத்தைச் சொல்ல. தோல்வி முகம் காட்டினாலோ, பாதியிலேயே நேரடி ஒளிபரப்பு ஜகா வாங்கும். அந்த இடத்தில் ஏதாவது ஒரு காமெடி ஷோ ஓடிக் கொண்டிருக்கும். இவர்கள் காமெடியை மக்கள் மறக்க இந்தக் காமெடி. இவர்களுக்கு சற்றும் சளைக்காத கூத்து ஜெயாவிலும் அரங்கேறும் என்றாலும், அதில் கூட அவர்களால் சன் அளவு பிரகாசிக்க முடியவில்லை!
காதலில் விழுந்தேன் என்ற குப்பைப் படத்தை வெற்றிப் படமாக்க சன் டிவி செய்த கண்றாவி உத்தியில் ஆரம்பித்தது சினிமாத் துறைக்கு சாபக்கேடு.
வேட்டைக்காரன் ரிலீஸ் வரை அதையே பிரதானமாகப் பிடித்துக் கொண்டு தொங்குகின்றனர். கதை இருக்கா… இல்லையா,வேறு ஏதாவது உருப்படியான சமாச்சாரம் உள்ளதா? என்றெல்லாம் கவலையேபடாமல், கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி, வரை முறை இல்லாத விளம்பரம் மூலம் அந்தப் படத்தை வெற்றிப்படம் என்று காட்டும் அடாவடிக்கு இன்று தமிழ் சினிமாவே அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
சன் நெட்வொர்க் சானல்கள் 10 நொடி விளம்பரத்துக்கு வெளி நபர்களிடம் வசூலிக்கும் கட்டணம் பல லட்சங்கள். இந்தத் தொகையை, அவர்கள் வாங்கி விற்கும் படத்துக்கு செய்யும் விளம்பர எண்ணிக்கைக்கேற்ப கணக்கிட்டுப் பாருங்கள்… சன் பிக்சர்ஸ் ரிலீஸ் படங்களின் உண்மையான வசூல் தெரிந்துவிடும்.
எந்தப் படமாக இருந்தாலும் சன் பிக்சர்ஸின் ‘வெற்றிப்படம்’ என்ற லேபிளையும் சேர்த்து ஒட்டித்தான் விளம்பரமே செய்கிறார்கள். அப்படியெனில் வெற்றி என்ற சொல்லுக்கோ, காசு கொடுத்து படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் வைத்துள்ள கருத்துக்கோ மரியாதையே இல்லையா?
இதையெல்லாம் விட கொடுமை, விருப்பு வெறுப்பு இல்லாமல், மக்களுக்கு தகவல் சொல்ல வேண்டிய செய்திகளில் கூட, சன் பிக்சர்ஸ் படங்கள் பற்றிய வெற்றிச் செய்திகள்தான். அதுவும் தலைப்புச் செய்தியாக!
செய்தி ஒளிபரப்புக்கென வாங்கும் அனுமதியை எந்த அளவு துஷ்பிரயோகம் செய்கிறார்கள் பாருங்கள்…
ஒரு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை செய்தியாகச் சொல்கிறோம் என இவர்கள் வாதிடுவார்களேயானால், தமிழில் வெளியாகும் எல்லா படங்களின் ரிசல்டையும் இதே பரபரப்பு ப்ளஸ் முக்கியத்துவத்தோடு சொல்லலாமே!
காதலில் விழுந்தேன் படத்தின் முதல் நாள் காட்சியில், கிட்டத்தட்ட பாதிப் படத்திலேயே கால்வாசி ரசிகர்கள் திட்டியபடி எழுந்து சென்ற காட்சியைக் கண்ணால் பார்த்தேன். வெளியில் போய் படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநரை இங்கே எழுத முடியாத அளவு வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டுப் போனார்கள் ரசிகர்கள். ஆனால் வெகுஜன ஊடகமான சன் அந்தப் படம் வெற்றி என்று காட்ட அப்படி மெனக்கெட்டது.
அதன் பிறகு ரிலீஸ் பண்ண எல்லா படங்களுக்கும் இதே உத்திதான். தீ என்ற ஒரு குப்பைப் படத்தைக் கூட மெகா ஹிட் படம் என்றே வர்ணித்தார்கள். அது என்ன கருமமோ தெரியவில்லை… இவர்கள் வாங்குவது எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி, சிக்கான(Sick) படங்கள்தான் (அயனை மட்டும் இதில் சேர்க்க முடியாது!).
இதற்கு சிகரம் வைத்தது போல அமைந்திருக்கிறது இப்போது விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள வேட்டைக்காரன் படம் குறித்து சன் செய்யும் பொய்ப் பிரச்சாரங்கள்.
இந்தப் படம் குறித்து மக்கள் ஒருமனதாகச் சொன்ன, சொல்லி வரும் தீர்ப்பையே அழித்து எழுத நினைக்கிறது சன்.
சாதாரணமாக பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களைக் கூட விட்டுவிடலாம்… அவர்களின் தராசு தடுமாறுவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் காசு கொடுத்து மெனக்கெட்டு பார்த்துவிட்டு பதிவு செய்துள்ள நூற்றுக்கணக்கான பதிவர்களின் விமர்சனங்கள் ஒட்டுமொத்தமாக சொல்லும் தீர்ப்பைக் கூட பொய் என்கிறதா சன்?
எனக்குத் தெரிந்து படம் வெளியாகி 1 மணி நேரத்துக்குள் சூப்பர் டூப்பர் ஹிட் என்று புளுகப்பட்ட ஒரே படம் இந்த வேட்டைக்காரனாகத்தான் இருக்கும். இந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகள் எம்ஜிஆர், ரஜினி, அமிதாப் படங்களுக்குக் கூட இப்படி ஒரு Verdict, அதுவும் அத்தனை மின்னல் வேகத்தில் தரப்பட்டதில்லை. அட, ஒரு சினிமாவை பார்த்து முடிக்கவே 2.30 மணி நேரமாகுமே… இவர்களோ, வேட்டைக்காரன் படம் காலை 11.30 மணிக்கு வெளியானதென்றால், இவர்கள் அடுத்த ஒரு மணிநேரத்தில் தங்கள் செய்திகளில் வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. வெற்றி வெற்றி என்று.
அன்று மாலையே விஜய் ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் வெற்றி’ என்று பேட்டியெல்லாம் தருகிறார். தங்கள் பொய்களை தாங்களே தீவிரமாக நம்ப ஆரம்பித்துவிட்டதன் விளைவு இது.
விஜய் வெற்றி பெறுவதில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதுவும் தன்னை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் என்று கூறிக் கொள்ளும், அவர் படங்களையே திரும்பத் திரும்ப காப்பியடிக்கும் விஜய் தாராளமாய் ஜெயிக்கட்டும். ஆனால் அதில் குறைந்தபட்ச ஒரு நேர்மை, யோக்கியத் தன்மை வேண்டாமா?
சொல்வது பொய் என்று தெரிந்தே அந்தப் பொய்யை மெய்யாக்கிக் காட்ட முயலும் சன் டிவியின் இந்தப் போக்கு, சமூகத்தின் நோயாக மாறி விடக்கூடாதே என்பதற்காகவே இந்த கட்டுரை.
குறிப்பு: சன் பிக்சர்ஸ் தயாரிப்புதான் எந்திரன் படமும். இந்த அலசல் அதற்கும் பொருந்துமா என்ற ரீதியில் பின்னூட்டங்கள் வரக்கூடும். அவர்களுக்காக இந்த பதில்…
நிச்சயம் எந்திரன் படத்துக்கு இப்படிப்பட்ட நிலை வராது. ரஜினியின் எந்தப் படமும் பொய்ப் பிரச்சாரத்தில் ஓட்டப்பட்டவை அல்ல. வெற்றியோ தோல்வியோ… அவரது படங்களின் ரிசல்டை யாரும் மறைக்கவோ திசை திருப்பவோ முடியாது!
With ரேகர்ட்ஸ்
For TRUECARE A2Z