Monday, November 29, 2010

பவானி ஆற்று தண்ணீருக்கான தண்டத்தீர்வை ரத்து

50 ஆண்டு போராட்டத்துக்கு முடிவு:
 


பவானிசாகர் அணை முதல் பவானி கூடுதுறை வரையிலும் பவானி ஆற்றங்கரையில் மோட்டார் வைத்து, தங்கள் நிலங்களுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகின்றனர். இப்படி அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதற்கு தண்டத்தீர்வை போட்டு விவசாயிகளிடம் அரசு பணம் வசூல் செய்து வந்தது.

கடந்த 50 வருடமாக மஞ்சள், கரும்பு, வாழை, நெல் சாகுபடி செய்த விவசாயிகளிடம் முதல் வருடம் ஒரு ஏக்கருக்கு ரூ.220 வீதம் வசூல் செய்யப்பட்டது.

இரண்டாது வருடம் ஏக்கருக்கு ரூ.440 எனவும் இப்படி வருடத்துக்கு வருடம் ஒவ்வொரு மடங்காக தண்டத்தீர்வையை உயர்த்தி தற்போது ஏக்கருக்கு ரூ.1000 வரை வசூலிக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்தத் தண்டத்தீர்வையை ரத்து செய்ய வேண்டும் என 50 வருடங்களாக அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் போராடி வந்தனர். சத்தியமங்கலம் பவானி நதிநீரேற்றுப் பாசன சங்கம், ஜம்பை, தளவாய்ப்பேட்டை விவசாய சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

சங்கப்பிரதிநிதிகள் சத்தியமங்கலம் எம்எல்ஏ தர்மலிங்கத்திடமும் கோரிக்கை மனு கொடுத்து முறையிட்டனர்.
இதனையடுத்து விவசாயிகளை அழைத்துச் சென்று வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி, சட்டஅமைச்சர் துரைமுருகன் ஆகியோரை எம்எல்ஏ தர்மலிங்கம் சந்தித்து தண்டத்தீர்வையை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த 4 வருடங்களாக எம்எல்ஏ எடுத்த முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை தண்டத்தீர்வையாக பல மடங்கு தொகை வசூலிப்பதை ரத்து செய்து, வருடத்துக்கு ஒரு முறை ஏக்கருக்கு ரூ.200 மட்டுமே இனி வசூல் செய்யப்படும் என அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment