Monday, November 29, 2010

பவானி ஆற்று தண்ணீருக்கான தண்டத்தீர்வை ரத்து

50 ஆண்டு போராட்டத்துக்கு முடிவு:
 


பவானிசாகர் அணை முதல் பவானி கூடுதுறை வரையிலும் பவானி ஆற்றங்கரையில் மோட்டார் வைத்து, தங்கள் நிலங்களுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகின்றனர். இப்படி அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதற்கு தண்டத்தீர்வை போட்டு விவசாயிகளிடம் அரசு பணம் வசூல் செய்து வந்தது.

கடந்த 50 வருடமாக மஞ்சள், கரும்பு, வாழை, நெல் சாகுபடி செய்த விவசாயிகளிடம் முதல் வருடம் ஒரு ஏக்கருக்கு ரூ.220 வீதம் வசூல் செய்யப்பட்டது.

இரண்டாது வருடம் ஏக்கருக்கு ரூ.440 எனவும் இப்படி வருடத்துக்கு வருடம் ஒவ்வொரு மடங்காக தண்டத்தீர்வையை உயர்த்தி தற்போது ஏக்கருக்கு ரூ.1000 வரை வசூலிக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்தத் தண்டத்தீர்வையை ரத்து செய்ய வேண்டும் என 50 வருடங்களாக அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் போராடி வந்தனர். சத்தியமங்கலம் பவானி நதிநீரேற்றுப் பாசன சங்கம், ஜம்பை, தளவாய்ப்பேட்டை விவசாய சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

சங்கப்பிரதிநிதிகள் சத்தியமங்கலம் எம்எல்ஏ தர்மலிங்கத்திடமும் கோரிக்கை மனு கொடுத்து முறையிட்டனர்.
இதனையடுத்து விவசாயிகளை அழைத்துச் சென்று வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி, சட்டஅமைச்சர் துரைமுருகன் ஆகியோரை எம்எல்ஏ தர்மலிங்கம் சந்தித்து தண்டத்தீர்வையை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த 4 வருடங்களாக எம்எல்ஏ எடுத்த முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை தண்டத்தீர்வையாக பல மடங்கு தொகை வசூலிப்பதை ரத்து செய்து, வருடத்துக்கு ஒரு முறை ஏக்கருக்கு ரூ.200 மட்டுமே இனி வசூல் செய்யப்படும் என அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

Friday, October 15, 2010

குட்டி கதைகள்

கொடுத்துப் பெறுதல்

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.


உலகத்திற்கு உப்பாய் இரு

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது


மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.
"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

Saturday, February 07, 2009

'பச்சோந்தி'க் கல்

நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"

தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"

ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.

ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.

அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.

கை மேல் பலன் கிடைத்தது !

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.
இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.
மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.
சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!


காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது

இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது.

கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். 'நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே' என்றான் அவன்.


வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.


நன்றி:  

Sunday, October 10, 2010

என்னைக் காணவில்லை





அன்புள்ள
அம்மா அப்பாவுக்கு
கண்ணுக்கு தெரிந்தாலும்
உங்கள்
கண்ணில் படாத கண்மணி
எழுதும் கண்ணீர் மடல்

 
இங்கு
என்னுடன் இருக்கும்
பெற்றோர்கள் இருந்தாலும்
அனாதைகளான அரும்புகள் நலம்
பிள்ளை பெற்றாலும்
மலடுகளான நீங்கள் நலமா ?

என்னால்
வளர்க்கப் பட்ட
பூனைக் குட்டிக்காவது
உங்கள்
அன்பு முழுமையாகக் கிடைக்கட்டும்
எனக்கு ஊட்டாத
பாலும் பிஸ்கட்டும்
அதற்காவது கிடைக்கட்டும்
அந்தப்
பூனைக்கு
என் வணக்கத்தைச் சொல்லுங்கள்


கதகதப்பான மையிருட்டில்
தொப்புள் கொடி சுவாசத்தில்
கைமடக்கி கால்மடக்கி
இல்லாத சிந்தனையிலிருந்து
மீண்டு பிறந்தபோது
வாய்விட்டு
அழுதது ஏன் தெரியுமா ?

கண்களை குத்திய
வெளிச்சத்தைக் கண்டு அல்ல
சுவாசக் கோசத்தில்
புத்தம் புதிதாக
நுழைந்த காற்றுத் தந்த
குறுகுறுப்பாலும் அல்ல

என் கண் முன்னால்
படம் எடுத்து நின்ற
கேள்வி குறியை கண்டு
அந்த குறி கேட்ட
புரியாத கேள்வியை பதிலாக்கவே
இந்த கடிதம்


உருண்டு புரண்டு
தவழ்ந்து
நடைவண்டி பழகி
விழுந்து எழுந்து
அழுது
கைதட்டி சிரித்து
உங்கள்
மடியில் கிடக்க வேண்டிய நான்
காப்பகத்தில்
ஆயா
திணிக்கும் பால் புட்டியை
முச்சுத் திணரத் திணர
உறிஞ்சி
  விட்டு
வயிற்றை
சுமக்க முடியாமல்
மல்லாந்துக் கிடக்கிறேன் 


வாய்வலிக்காத
அம்மாவின் மார்பும்
கன்னம் பதிக்க
அப்பாவின் தோளும்
கனவில் மட்டுமே
வந்து வந்து மறைகிறது
நிஜத்தில் இருந்தும்
நிழலை நேசிக்கும்
சுபாவம்
அப்போதே அரும்பி
விட்டது

அப்பா !
நீ
சின்னவனாய் இருந்தபோது
தொட்டிலில் இட்டு
ஆராரோ ஆரிராரோ
பாடி தாலாட்டினாளாம் பாட்டி
கைவீசம்மா கைவீசு
என கொஞ்சினாளாம் அத்தை
நீ
தளர்நடை பயின்று
நெஞ்சில் ஏறி கைகொட்டி
குதித்தப்போது
சங்குச் சக்கர சாமிவந்து
ஜங்கு ஜங்குன்னு ஆடுதாம்மென
சந்தம் படித்தாராம் தாத்தா
நான் தாலாட்டும் கேட்டதில்லை
தொட்டிலில் ஆடியதும் இல்லை
அத்தை முகம் பார்த்ததில்லை

தாத்தா பாட்டியென்றால்
யாரப்பா?
அவர்களுக்கும் நம்மைப் போன்ற
உருவம்தான் இருக்குமா?
அல்லது அவர்கள்
உன்பேச்சிலும் என்கனவிலும்
வந்துபோகும்
பூதங்களா பூச்சாண்டிகளா?
அம்மா !
சாணம் பூசியத்தரையில்
உடம்பெல்லாம் புழுதிப்பட
உருண்டு புரண்டு
மிட்டாய்காக அழுவாயாமே

மரப்பாச்சி பொம்மைக்கு
தலைவாரி
பூச்சூடி பொட்டிட்டு
உன்னோடு
கூடவே உறங்க வைப்பாயாமே

உன்னம்மாவின்
புடவைத் தலைப்பை கிழித்து
தாவணி போட்டு
கதவுக்கு பின்னால் பதுங்கி
நின்று சிரிப்பாயாமே

பள்ளிக்கூட
புத்தகப் பையில்
புளியங்காயும் மிளகாய்த்தூளும்
வைத்ததனால்
அடித்த ஆசிரியரை

கெட்ட வார்த்தையால் திட்டினியாமே

என்னநீ செய்தாலும்
என்பொண்ணுக்கு
குறும்பு
கொஞ்சம் ஜாஸ்தி என்று
உன்னப்பா
அணைத்துக் கொள்வாராமே

அப்பா என்றால்
அடிப்பவர் என்றுதான்
எனக்குத் தெரியும்
அவரால்
அணைக்கவும் முடியுமா?
அதுவெல்லாம்
இருக்கட்டும் அம்மா
குறும்பு குறும்பு என்கிறார்களே
அப்படியென்றால் என்ன ?

ஒருவர்
கண்ணைமூடி
எண்களை எண்ண
மற்றவரெல்லாம்
ஓடிஒளிந்துக் கொள்வது
கண்ணாமூச்சி ஆட்டமாம்
ஒருத்தர்
சட்டையை இன்னொருத்தர்

பிடித்து ஓடுவது
ரயில்வண்டி ஓட்டமாம்

ஆற்றங்கரை ஓரம்
மணலை குவித்து வைத்து
நடுவில் ஓட்டை வைத்தால்
அதுதான் வீடுகளாம்
களிமண்ணை பிசைந்து
உருட்டி விரலால்
துளையிட்டால் சட்டிப் பானைகளாம்

கருவேலம் முள்ளில்
பனையோலையை செருகினால்

காற்றாடியாம்
காகிதத்தை
மடித்து மிதக்க விட்டால்
கத்திக் கப்பலாம்

இன்னும்
என்னனென்வோ
பெயர் சொல்ல முடியாத
உல்லாச ஆட்டங்களாம்
இத்தனையையும்
நீங்கள் பார்த்திருக்கிறீர்களாமே
எனக்கு ஒருமுறை
டி.வி.யிலாவது காட்டக் கூடாதா?

இவையெல்லாம்
நிகழ்வதற்கு
பெரிய இடம் வேண்டுமே
அப்போதெல்லாம்
வீடுகளே இல்லையா?
அல்லது
எல்லோரும் மைதானத்தில்தான்
தூங்குவீர்களா

சுமைதூக்கும் தொழிலாளிக்கு
போனஸ் வேண்டுமென ஆங்கிலப்
பத்திரிக்கையில்
  கட்டுரை
எழுதியிருந்தீர்கள்
சுமப்பது சுலபம் அல்ல
பெரிய கஷ்டம்தான்

சுமைதூக்கும் எல்லோருக்கும்
போனஸ் வேண்டும் என்றால்
எனக்கும்தான் முதலில் வேண்டும்
தினம்தினம்
 நான்
சுமக்கும் புத்தகச் சுமை
அரிசி மூட்டையவிட
கனம்குறைந்ததா என்ன?
ஊரான்
கஷ்டமெல்லாம்
உன் கண்ணில் படுகிறது
உன்பிள்ளை
துன்பம்
ஏன் உனக்கு தெரியவில்லை அப்பா

தன்வீட்டை
தானே சுமக்கும்
ஆமைபோல்
என்முதுகு வளைந்து கிடக்கிறது

ஃபிரட்டும் ஜாமும்
தின்றுதின்று
வயிறும்
கல்லாகிக் கிடக்கிறது

கம்ப்யூட்டர்
 
திரையையே
பார்த்துபார்த்து
கண்களிரண்டும் பூத்துக்கிடக்கிறது

முதுகுவலி தீர
அம்மாமேல்
உருண்டு எழவேண்டும்

வயிற்றுக்
கனம்தீர
ஒருகவளம் சோறுவேண்டும்

கண்கள் குளிர
அப்பா
உன்முகத்தை பார்க்க வேண்டும்
விடுதியின்
மூட்டைப் பூச்சியும்
கொசுக்களும் இல்லாமல்
ஆசிரியையின் மிரட்டும்
முகம்காணாது
ஒரு நாளாவது
நிம்மதியாய் தூங்க வேண்டும்

ஒருநாள் கனவில்
கடற்கரை ஓரம்
கால்வலிக்க ஓடுகிறேன்

கல்லும் முள்ளும்
நிறைந்த பாதையில்
ரத்தம் சொட்டச்சொட்ட
நடக்கிறேன்

வெளிச்சம்
இல்லாத
காட்டிற்குள் அலைகிறேன்
கரடிப் புலிகளையும்
கண்டு மிரளுகிறேன்

அருவியில்
  விழுந்து
ஆற்றில் மூழ்கி
சுழலில் சிக்கி
பாறையில் மோதி
மொத்தப்படுகிறேன்

கொதிக்கும் எண்ணெய்
கொப்பரையில் கிடந்து துடிக்கிறேன்
நாலாபுறமும்

ஈட்டி நெறுங்கும்
சிறைச்சாலைக்குள் மாட்டிக் கொள்கிறேன்
வயிற்றில் பல்முளைத்த
குள்ள பூதங்கள்
என்னைத்
தூக்கிப்போட்டு பந்தாடுகின்றன

அலறலும்
அழுகையுமாய்
எதையோ
ஒன்றை நான் தேடுகிறேன்
கருவறை முதற்கொண்டு
என்னோடு இருந்த
அந்த
எதோ ஒன்றை
காணவில்லை
அது
எதுஎனவும்
எனக்குத் தெரியவில்லை
ஆயினும்
இன்னும் கடினமான
வழியிலெல்லாம்  தேடித்தேடி அலறு
கின்றேன்


தேடுவது எதுவெனத்
தெரிந்தாலாவது நிம்மதிக் கிடைக்கும்
இருண்டக் காட்டிற்குள்
குருட்டுக் கண்களுடன்
மீண்டும் மீண்டும்
முட்டிமோதி தேடுகிறேன்

திடீரென
காற்று ஒன்று வீசியது
அந்தக் காற்றில்
சிறகுகள் முளைத்த
அம்மா மாதிரி
அழகான பெண்ணொருத்தி வந்தாள்

கண்ணே!
நீ
தேடுவது தொலைத்துவிட்ட உனது
குழந்தைத்தனம் என்றாள் 

 எனக்கு இன்னும்
பத்து வயது பிறக்க வில்லை
குழந்தைப் பருவம் மாறவில்லை
அப்போது
எப்படி குழந்தைத் தனத்தை தொலைத்தேன்

நீனாகத்
தொலைக்க வில்லை
உன்னிடம் இருந்து
அதை மற்றவர்கள்
பறித்துக் கொண்டனர்
எனக்கூறி
அப்பெண்ணும்
மறைந்து விட்டாள்

அந்தக்கனவு
முடிந்து இந்தநிமிடம் வரை
யோசித்துக் கொண்டே இருக்கிறேன்
என்
குழந்தைத்தனத்தை
எப்போது எங்கு எப்படித் தொலைத்தேன்

சுற்றிவிட்ட பம்பரம்போல்
சிந்தனைச் சுழலுகிறது
வற்றிவிட்டக் குளத்திற்கு
கொக்குகள் வராததுபோல
விடையும் வரவில்லை

அதனால்தான்
இந்தக்
கடிதம் எழுதுகிறேன்

ஒருநாள்
விடிந்தும் விடியாதக்
காலைப் பொழுதில்
அட்டைப்பூச்சிப்போல்
அம்மாவை கட்டிப்பிடித்து தூங்கிய
என்னை
வலுக்கட்டாயமாய்
தூக்கி குளிக்க வைத்து
அழஅழ பாலர்வகுப்பின்
படிக்கட்டில் கொண்டு விட்டீர்களே
அப்போது
தொலைத்திருப்பேனா

தெருவில் இறங்கி

மிட்டாய் எச்சில்
முழங்கையில்
வழிய
நடந்த நேரம்
வீட்டிலிருந்து
ரைம்ஸ் படியென
இழுத்து வந்தீர்களே
அப்போதுதான்
தொலைந்திருக்குமா

புதிதாய் வாங்கிய
நாய்குட்டி பொம்மையை
பப்லுக்கு காட்ட
எடுத்துப் போகும்போது
டியூஷனுக்கு போவென
துரத்தி
  விட்டீர்களே
அப்போது
தொலைந்திருக்குமோ

நம்வீட்டுத் தோட்டத்தில்
பூத்திருந்த ரோஜாவில்
வந்து உட்கார்ந்த
வண்ணத்துப் பூச்சியை
தொட்டுப்பார்க்க ஓடி
கீழே விழுந்து
உடையெல்லாம் சேறான போது
அடித்தீர்களே
அப்போது தொலைந்திருக்குமோ 


அட!
தேவதை நான் தொலைத்ததாகச்
சொல்ல வில்லையே
யாரோ
எடுத்ததாகத் தானே சொல்லியது

அம்மா
உன்னை ஒன்று கேட்கிறேன்
கோபப்படாதே
அன்றொரு
நாள்
நீ செய்த
முந்திரி அல்வாவை
பக்கத்து வீட்டுச் சீனுவுக்கு

கொடுக்க எடுத்தபோது
திட்டி பிடுங்கிக் கொண்டாயே
அப்படி
என் குழந்தைத்தனத்தையும்
பிடுங்கி
எங்கோ மறைத்து வைத்திருக்கின்றாயோ

அப்பா
வீட்டுப்பாடம் செய்யாமல்
காந்திஜி படம்
வரைந்தபோது
அதைப் பிடுங்கி தூர எரிந்தாயே
அப்படி
இதையும் எங்கோ எரிந்துவிட்டாயோ

நீங்கள்
இருவரும் எடுக்கவில்லை என்றால்
என்
குழந்தைத்தனத்தை வேறு யார் எடுப்பார்?

உதட்டுக்குச்
சாயம்பூசி
ஒய்யாரமாய்
நடந்துவரும்
கணக்கு டீச்சரையும் கேட்டேன்
எடுத்ததற்கெல்லாம்
கம்பைத் தூக்கும்
பூகோள
வாத்தியாரையும் கேட்டேன்
அந்தப்பீஸ்
இந்தப்பீஸ் என
பணத்தையே கொத்தும்
பள்ளி நிர்வாகியையும் கேட்டேன்
எல்லாம் தெரிந்தும்
தெரியாததுபோல்
மௌனமாய்
எழுந்து நிற்கும்
பள்ளிக் கட்டிடத்தையும் கேட்டுவிட்டேன்
எல்லோரும்
மௌனமே சாதிக்கின்றனர் 

 நீங்களும்
அப்படி இருக்கலாமா
பெற்றப் பிள்ளையின்
கேள்விகளுக்கு
பதில்சொல்ல வேண்டியது
பெற்றவர்களின் கடன் அல்லவா?



 

அப்துல்கலாம் காப்பாற்றப்பட்டார்



    அரசியல்வாதிகளை பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் மிகவும் விழிப்போடு இருப்பார்கள். விழிப்புணர்வு இல்லாத அரசியல் வாதிகள் இந்தியாவின் முளை முடுக்குகளில் போய் தேடினால் கூட கிடைக்க மாட்டார்கள் இதை படிப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும். தேசிய கீதத்தை கூட தப்பு இல்லாமல் பாடத் தெரியாத அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்வா? இது என்ன இந்த ஆள் எதாவது பகல் கனவு கண்டு அது கலையாமலே பேசுகிறானா என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சுய உணர்வோடு தான் பேசுகிறேன், எழுதுகிறேன்.

எந்ததொரு விஷயத்தையும் உடனடியாக தீர்த்து விட்டால் தங்களது பிழைப்பு நடக்காது என்பதில் நமது அரசியல்வாதிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வை பற்றி தான் சொல்கிறேனே தவிர எதோ அவர்களுக்கு பொருளாதாரம் சர்வதேச பிரச்சனைகள் சாக்கடையை ஒழித்து கட்டுவது போன்றவற்றில் விழிப்புணர்வு வந்துவிட்டதாக நான் கருதியதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


                    ஒரு நாற்பது, ஐம்பது வருஷயங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் தரையை பெருக்கும் அளவிற்கு தோளில் துண்டு போட்ட உடன்பிறப்புகள் வடக்கிலிருந்து இந்திமொழி வருகிறது, தமிழ் மொழியை கொன்றுவிட்டு தான் மத்திய அரசு மறு காரியம் பார்க்கும்.  தமிழை காப்பாற்றுவதற்கு கழகத்தை விட்டால் வேறு நாதியில்லை எங்களுக்கு ஒட்டு போடுங்கள், பதவியில் அமர்ந்தோமோ இல்லையோ எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கொண்டு வந்துவிட்டு தான் மறுகாரியம் பார்ப்போம் என்றும் குதிகுதியென குதிப்பார்கள்.  கரகரப்பான கழகத்தின் பேச்சுக்கு அறிவை கடன் கொடுத்து ஒட்டுகளும் போட்டு விட்டோம்.  1967-ல் அரியனை ஏறியவர்கள்

2010 முடிய போகும் இந்த காலம் வரை தமிழக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லையென்பது வேறு விஷயம், எங்கே தமிழ், எங்கே தமிழ் என்று தேட வைத்து விட்டார்கள்.

தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்துபடுத்த தானை தலைவர்கள், தனது பேரன் பேத்திகள் ஆங்கிலத்தில் உரையாடுவது கண்டு ஆனந்த கடலில் முழ்கி தத்தளிக்கின்றனர், ஒட்டு போட்ட அருமை தமிழனோ தங்களது பிள்ளைகளின் அறிவை ஆங்கில பீடத்தில் பலிகொடுத்து விட்டு மொழியற்ற அனாதையாக ஆக போவது கூடத் தெரியாமல் செம்மொழி மாநாட்டிற்கு வண்டியேறி கொண்டிருக்கிறார்.  தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் பலநாட்டு அறிஞர்கள் வந்து நல்ல கருத்துக்களை சொல்வார்கள் அதை காதார கேட்போம் என்ற ஆசையினாலா? அல்லவே  அல்ல.  கழக கண்மணிகள் தமிழ் வளர்க்க ஊற்றி கொடுக்கும் மதுக் கோப்பைகளுக்காகவும், பிரியாணிக்காகவும் தான் எங்கள் ஊர் தமிழன் கொங்கு மண்டலம் புறப்படுகிறான்.

இந்தி தமிழகத்திற்குள் வந்தால் இங்கிருக்கும் நல்ல இயல்புகள் எல்லாம
போய்விடும்.  வடபுலத்து பண்பாரடுகள் கலச்சாரம் தமிழ் பண்பாட்டை சிதைத்துவிடும்.  தமிழ்நாட்டை தமிழன் ஆள முடியாது. தமிழ் பேசுபவர்கள் அனைவரும் இரண்டாம் தர குடிமக்களாகி  விடுவார்கள் தமிழக வளமெல்லாம் சுரண்டிக் கொண்டு போகப்பட்டு விடும்.  தமிழன் என்ற இனமே பூண்டற்று அழிந்துவிடும் என்று மேடை தோறும் பேசிய உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் தமிழனை தமிழ்மொழியை காப்பாற்ற தனிப்படை அமைப்போம் என்று நெற்றி நரம்பு புடைக்க கத்தினார்கள்.  அத்தோடு மட்டும் நின்றார்களா? இந்தி ஆதிகத்தை ஒழிக்க வேண்டுமென்றால் வடபுலத்து ஆக்கிர மிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்றால் தமிழன் தனிநாடு காண வேண்டுமென்று போர் முரசு கொட்டினார்கள்.


    தின்ணையில் படுத்தேனும் திராவிடநாடு வாங்குவோம் என்றார் ஒருவர்.  அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றார் வேறொருவர்.  தமிழன் நம்பினான் எந்த காலத்திலும் நடைபெறவே முடியாத பச்சை பொய்களை கொட்டி வித்த வியாபார தலைவர்களை இன்றும் நம்புகிறான்.  நாளையும் நம்பி ஏமாறத் தயாராக இருக்கிறான்.  ஆடுகளே வந்து கழுத்தை நீட்டி என்னை வெட்டு என்று சொல்லும் போது கசாப்பு கடைக்காரன் என்ன செய்வான்.   பாவம் மேடை பேச்சாளர்களையும், திரைப்பட நடிகர்களையும். பகல் வேடதாரர்களையும் தங்களது ரச்சகர்கள் என்று தமிழன் நினைக்கும் வரை இந்த நாடு உருப்படாது.

ராஜ்வ் காந்தி அனுப்பிய இந்திய அமைதி காப்புபடை  இலங்கையில் தமிழர்களை ரத்த சிந்த வைத்ததாம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அவமானம் படுத்தியதாம் அதனால் அந்த படை அந்நிய நாட்டில் பணி முடித்து தாயகம் திரும்பிய போது தமிழகத்தின் முதல்வராக இருந்த திருக்குவளை தந்த திருமகனார் ராணுவத்தை வரவேற்க கூட போக மறுத்தார்.  நான் இந்திய அரசியல் சானத்திற்கு கட்டுப்பட்ட முதலமைச்சர் என்பதை விட சக தமிழனின் துயரத்தில் பங்கெடுத்து கொண்ட சாதாரண தமிழனாக இருப்பதே பெருமை என்பது போல் நடந்து கொண்டார்.

இன்று இலங்கையில் தமிழ்மக்கள் அனைவரும் நயவஞ்சக முறையில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள்.  உரிமைக்கு குரல் கொடுத்த வீர மறவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு விட்டது.  லட்ச கணக்கான தமிழ் பிணங்கள் காக்கைக்கும் கழகுக்கும் இரையாக்கப்பட்டு விட்டன.  பசியாலும் நோயாலும் பண்பாடுமிக்க தமிழர்கள் மிருகங்களை விட கேவலமாக முள்வேலிகளுக்குள் அடைப்பட்டு கிடக்கிறார்கள் அமைதிப்படையை வரவேற்க மறுத்த, தமிழர்களுக்காகவே வாழ்வேன், தாழ்வேன் என்ற வீர உரையாற்றிய முதுபெரும் அரசியல் சாண்க்கியர் முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் என்று தனக்கு தானே பட்டம் வழங்கி கௌரவித்து கொண்ட தமிழகத்தின் முதல்வர் சினிமா கலை விழாக்களில் தன்னை மறந்து உறங்கி கொண்டிருக்கிறார்.
உறங்குபவனை எழுப்பாதே, அவன் அந்த நேரத்தில் மட்டுமாவது பாவம் செய்யாமல் இருப்பான் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ஆனால் கலைஞர் அவர்கள் தனக்கும், தன் குடும்பத்திற்கும் தன் பதவிக்கும்  இடைஞ்சல் வந்து விடக் கூடாது என்பதில் அக்கறையோடு இருக்கிறார்.  அந்த அக்கறையின் வெளிபாடுத் தான் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வயோதிக தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த போது ஆகாயவிமான நிலையத்திலே திருப்பியனுப்ப சாணக்கிய திட்டம் வகுத்தது.

தம்பி பிரபாகரனை வீரன், சூரன், தியாகி என்றுயெல்லாம் போற்றி புகழ்ந்தவர் விடுதலை புலிகளின் தனிநாடு கோக்கைக்கு போர் பரணி பாடியவர் புலி உறுப்பினர் இறந்த போது தனியொரு இரங்கற்பாவே  வடித்துச் கொடுத்த சங்க தமிழ்றிஞர் தனது பதவிக்காக புலிகளின் போராட்டம் நியாமற்றது என்றதையும்

சிங்கள அரசுக்க அடி பணிவதில் தவறில்லை என்றதையும் காதார கேட்ட பின்பும் தமிழர்கள் இவரை தலைவர் என்று ஏற்று கொண்டிருப்பதும் விதியின் விளையாட்டு என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது.

   இன்று கூட தமிழுக்காகவும், தமிழர்காகவும் அயராது பாடுபடுவதாக சொல்லும் கருணாநிதி நமக்காக என்ன செய்திருக்கிறார்.  என்பதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்.  கழகங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட அனைகட்டுகள் எத்தனை தரமான பாலங்கள் எத்தனை, ஆயிரகணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழில் கூடங்கள் எத்தனை, புதிய பல்கலை கழகங்கள், கல்லுரிகள், பள்ளி கூடங்கள் எத்தனை நாற்பத்தி முன்று வருடங்களில் விரல் விட்டு எண்ணி விடலாம் முன்னேற்ற திட்டங்களின் பலனை.

புண்ணுக்கு புனகு புசுவது போல் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்படுகிறதே தவிர மற்றப்படி நடப்பதெல்லாம் வெறும் கேலி கூத்துகள் தான் காமராஜன் மதிய உணவு திட்டம் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது.  அது என்னவோ பெரிய கொடைவள்ளல் தனமாக விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர உண்மையா பலன் அதில் எதுவுமில்லை கலைஞர் புதிதாக கெட்டுபோன அரிசி சாதத்தில் வாரம் இரண்டு முட்டை தருகிறார்.  அந்த முட்டை சத்துணவு பொறுப்பாளர் ஆயா மற்றும் ஆசிரியர்களின் வயிற்றை நிரம்பிய பிறகு தான் குழந்தைகளின் தட்டுகளில் வந்து விழகிறது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பெயளவில் விளம்பரம் உண்மையில் நடப்பது என்ன ஒரு ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருப்பவருக்கு தான் இலவச சலுகை அதுவும் மின்சார இணைப்பு பெற வருட கணக்கில் காத்திருக்க வேண்டும்.  அதிகாரிகளுக்கு வெல்ல கட்டிகளை கணக்கில்லாமல் கொடுத்தால் கூட விண்ணப்பம் நகராது.  மேஜைக்கு மேஜை கப்பம் கட்டி கை சலித்து போன விவசாயிகளின் எண்ணிக்கை தான் அதிகமே தவிர உடனடியாக பலன் பெற்றது ஆயிரத்தில் ஒருவர் தான்.  இலவச மின்சாரம் என்பது எல்லாம் சரி வெயில் காலத்தில் வயிலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் எங்கே வருகிறது.

மின்சார தட்டுபாடு அதனால் குறிப்பிட்ட நேரத்தில் தான் கரண்ட் வரும் என்று மின்சார இலாக்கா அறிவிக்கிறது, வருடந்தோறும் இந்த அறிவிப்பை தான் பார்க்கிறோமே தவிர மின்சார உற்பத்தியை அதிகரிக்க இவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை என்னவென்று சல்லடை போட்டு தேடினாலும் ஒன்றும்
கிடைக்கவில்லை மின்சார உற்பத்தியை தனியார் வசம் ஒப்படைக்க போகிறார்களாம்.  ஒரு அரசாங்கத்தாலேயே உற்பத்தியை அதிகக்க முடியாத போது தனியாரால் எப்படி முடியும்?  முடியும்.  தனியாரிடம் ஒப்படைத்தால் தானே இவர்களின் மிக நீண்ட சட்டைப் பை நிரம்பும் அரசாங்க உற்பத்தி செய்தால் பரதேசி மக்கள் தானே பயணடைவார்கள் தமிழ்நாட்டிற்காக உயிரையும் கொடுக்க சித்தமாக இருக்கும் இந்த உத்தமர்களுக்கு என்ன பயன்.

இவையெல்லாம் கூட கிடக்கட்டும் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக ஆட்சிக்கு வந்த இவர்கள் மொழி வளர்ச்சிக்காக செய்தது என்ன.  தமிழ் கற்பிக்கும் பள்ளி கூடங்கள் வருடத்திற்கு ஆயிரத்திற்கு மேல் முடப்படுகிறது.  தமிழை பயிற்று மொழியாக கொண்ட படித்த இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.

சட்டம், மருத்துவம், பொறியியல், கணினிதுறை போன்றவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உள்ளது,  தமிழ் குழந்தைகள் பச்சை நிற பென்சிலை எடுத்து வா என்றால் புரியாமல் விழித்து க்கிரின் (green) பென்சிலை எடு என்றால் மட்டுமே எடுக்க கூடிய அளவிற்கு மொழி தேய்ந்து கரைந்து மறைந்து கொண்டு இருக்கிறது ஆனால் செம்மொழி தகுதியை தமிழ் பெற்று விட்டது என்று பல ஆயிரம் கோடியை கழக தமிழ் ஆர்வலர்கள் சுருட்டி கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் செம்மொழி மாநாடு கோவையில் நடந்தது.  அந்த விழாவிற்கு அப்துல்கலாமல் அழைக்கப்படவில்லை என்று சில அப்பாவிகள் வருத்தப்படுகிறார்கள்.  விஞ்ஞானி ஆனாலும் கூட தமிழை மறக்காத  தூயவர் தமிழிலேயே பதவி பிராமணம் எடுத்துக் கொண்ட தலைமை குடிமகன் தமிழையும் தேசத்தையும் சுவாசமாக கொண்ட நல்லவர் தமிழக்கு செம்மொழி தகுதியை வாங்கித் தந்த உண்மை தொண்டர் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தால்.

    செவ்வாயழை தோட்டத்தில் சீட்டாடும் குரங்குகளான வாலி வைரமுத்து கூட்டத்தார்கள் இடையில், வட்டமிடும் கழகுகளான அழகிரி, தயாநிதிமாறன் கும்பலுக்கு மத்தியில், வாய்பிளந்து நிற்கும் ஒநாய்களான கனிமொழி, கயல்விழி போன்ற அரைவேக்காட்டு மேதாவிகளுக்கு இடையில் சுற்றி வளைக்கும் மலை பாம்புகளான ஸ்டாலின், ராசாத்தி அம்மாள் நெருக்குதலுக்கு இடையில் பாவம் மாட்டிக் கொண்டு திக்கு முக்காடி போயிருப்பார்,  ஜெயலலிதா இரவோடு இரவாக கலைஞரை கைது  செய்த போது ஐய்யோ காப்பாற்றுங்கள் என்று கத்தினாரே அதே போல அப்துல்கலாம் கத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நல்ல வேளை கலைஞர் புண்ணியத்தில் நல்லவர்களின் நகைப்பிற்கு இடம் தராமல் செத்து போன இலங்கை தமிழர்களின் சாபத்திற்கு ஆளாகாமல் செத்து கொண்டிருக்கும் உலக தமிழர்களின் கோபத்திற்கு இறையாகாமல் அப்துல் கலாம் காப்பாற்றப்பட்டார்.  அதுவரையில் உலக தமிழர்களின் ஒரே தலைவருக்கு நன்றி.


நன்றி : உசிலா தேவி

Tuesday, September 21, 2010

ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

ஆன்மீகவாதி என்றால் முற்றிலும் துறந்து சாமியார் போல உள்ளவன் என்று பலர் நினைத்துக்கொண்டிருகின்றனர்.
கண்டிப்பாக அது உண்மை இல்லை என்பதை பற்றியே இந்த பதிவு.
உங்களை நீங்களே நன்றாக தெரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதே உண்மையான ஆன்மிகம்.உங்கள் உணர்வுகளை அடக்கி ஆளாதீர்கள்.உணர்வுகளை அடக்கி ஆள்வதே பல மனநிலை பிரச்சினைகளுக்கு காரணம் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.ஓஷோ,கிருஷ்ணமூர்த்தி என்று பலர் உள்ளனர்.இவர்கள் பலரினை பற்றி தெரிந்து கொண்டு உங்களுக்கு ஏற்ற வழியினை தேர்தெடுங்கள்.இவர்களின் வழிகள் வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் சேரும் இடமொன்றுதான்.

அட ஆன்மீகமா அது நமக்கல்ல என்று இருக்காதிர்கள்..வாழ்வை துறப்பதல்ல ஆன்மிகம் வாழ்வை அனுபவிப்பதே உண்மையான ஆன்மீகம்.

நன்றி: The Rebel

Tuesday, March 30, 2010

மாத்யூ ஹெய்டன் மட்டையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும்

ஐ.பி.எல் ஆட்டங்கள் போகும் பாதையப் பார்த்தால் கிரிக்கெட் உருப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. வெகுநாட்களாகவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்கள் கடவுள்களாகவும், மற்றவர்களை சார்லி, வையாபுரி லெவலுக்கு வைத்துப் பார்க்கும் நிலையே இருந்து வந்தது. அதுவும் பல போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் ஒரு படி மேலே கீழே போய் காமெடி பீஸாகவே மாறிவிடுவார்கள்.

சூப்பர்கள் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் பார்த்தவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். பந்துவீச்சாளர்கள் உருப்படியாக பந்துவீசினால் ஆட்டத்தை முழுமையாகவே கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்.

அதுவும் ஒரு பந்துவீச்சாளர் மட்டும் கூட தனது நான்கு ஓவர்களை ஒழுங்காகப் போட்டால் அவர் உடன் வீசப்படும் ஓவர்களையும் சேர்த்து எட்டு ஓவர்கள் கூட முழுமையாக கட்டுப் படுத்தப் பட்டு விடுகிறது,அதைத்தான் முரளி நிகழ்த்தினார். . இந்த கட்டத்தில் களத் தடுப்பாளர்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கை பெருகி அவர்களும் கூட வேலை ஒழுங்காக செய்ய ஆரம்பித்தால் சுலபமாக ஆட்டத்தை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடிகிறது.

கடைசி ஓவரை உருப்படியாக போட்டால் கூட போதும். அண்ணன் ஜோகிந்தர் டோனியை கேப்டன் வேலையில் நிரந்தரம் ஆக்கியது கூட அப்படித்தான்.


ஆட்டம் டையில் முடிந்தால் கூட சூப்பர் ஓவரை கொஞ்சம் கவனத்துடன் போட்டால் சுலபமாக வெல்ல முடியும். ஆக மட்டையாளர்கள் கையிலிருந்த ஆட்டம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக பந்துவீச்சாளர்களுக்கும் மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

சூழ்நிலை சமநிலையியல் விதிகளின்படி அனைத்தும் சமநிலையில் இருந்தால் மட்டுமே அந்த சூழல் நிலைத்து நிற்கும். இது அறிவியல், வரலாறு, புவியியல் ரீதியாக பலமுறை நிரூபிக்கப் பட்ட ஒன்று.

கிரிக்கெட்டில் மட்டையர்கள் மட்டும் மன்னர்களாக இருந்த நிலைமாறி பந்துவீச்சாளர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்க ஆரம்பித்திருப்பதால் கிரிக்கெட் உருப்பட்டு விடும் என்றே தோன்றுகிறது.

Monday, February 1, 2010

தாத்தாவின் செம்மொழி மாநாடும்... பேரனின் 'குவாட்டர் கட்டிங்'கும்!

தமிழ்ப் படம் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகையும் துவைத்து தோரணம் கட்டியிருக்கும் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி, அடுத்து தயாரிக்கும் இன்னொரு படத்துக்குப் பெயர் என்ன தெரியுமா?. சுத்தமான 'தமிழ்'ப் பெயர் - குவாட்டர் கட்டிங்!!

இது தமிழ்ப் பெயரா... என்ற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம்... முதலில் விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த குவாட்டர் கட்டிங்கை தயாநிதி நேரடியாகத் தயாரிக்கவில்லை. தமிழ்ப் படம் என்ற படத்தை எப்படி சிஎஸ் அமுதன் அண்ட் கோவின் 'வொய் நாட்' என்ற கம்பெனி தயாரித்து பின்னர் தயாநிதியின் க்ளௌட் நைனுக்கு விற்றதோ, அதே பாணியில்தான், குவாட்டர் கட்டிங்கும் தயாராகிறதாம்.

இந்தப் படத்திலும் ஹீரோ அதே மிர்ச்சி சிவா-தான்.

சத்தமில்லாமல்... அதே நேரம் வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தமிழ் தலைப்புதானா இது?

'இந்த தலைப்பு மற்றும் வரி பிரச்சினை பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை... காரணம் குவாட்டர், கட்டிங் என்பதெல்லாம் வழக்குச் சொல்லில் வந்துவிடும்' என்கிறார்கள் கூலாக.

செம்மொழி மாநாடு நடக்கும் நேரமாகப் பார்த்து இந்த 'கட்டிங்'கை விடுவார்களோ, என்னமோ தெரியவில்லை.

ஆஹா, தமிழுக்கு குவார்ட்டர், கட்டிங் என இரண்டு புதிய வார்த்தைகள் நல்வரவாக வந்திருக்கின்றன. சந்தோஷப்பட வேண்டிய சமாச்சாரமல்லவா!

தமிழன் ரசனையை என்னமாய் புரிந்து வைத்திருக்கிறார்கள்!

'தமிழ்ப் படம்'- திரை விமர்சனம்

நடிகர்கள்: சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம்எஸ் பாஸ்கர், சண்முகசுந்தம், பரவை முனியம்மா, திஷா பாண்டே

இசை:கண்ணன்
கேமிரா: நீரவ்ஷா
இயக்கம்: சிஎஸ் அமுதன்
தயாரிப்பு: தயாநிதி அழகிரி
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

தமிழ் சினிமா தன் முகத்தில் தானே உமிழ்ந்து கொண்டுள்ளது.. அல்லது தன்னைத் தானே ஒருமுறை சவுக்கால் அடித்துக் கொண்டுள்ளது, தமிழ்ப் படம் மூலம்.

ஒரு விமர்சகனாக நாம் என்னென்ன குற்றங்களைச் சொல்கிறோமோ, அதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டதுபோல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆண் குழந்தையே ஆகாத கிராமத்தில் பிறந்து, பாட்டியின் தயவுடன் தப்பித்து, சிறுவனாக சைக்கிளில் ஏறி உட்கார்ந்து ஒரு மிதி மிதித்ததும் பெரியவனாகி அநியாயத்தை தட்டிக் கேட்டு, அம்சமான பெண்ணைப் பார்த்து காதலாகி, அவளைக் 'கவிழ்க்க' ஒரே இரவில் பரதம் கற்று, ஏழை என்பதால் அந்தக் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணின் அப்பாவிடம் சவால் விட்டு, ஒரே பாட்டில் கோட்டீஸ்வரனாகி, அப்படியும் அப்பா பேர் தெரியாதவன் என்ற அவப்பெயர் மிஞ்சுவதால், சினிமாக்காரன்பட்டிக்கு அப்பாவைத் தேடிப் போய், குடும்பப் பாட்டின் உதவியுடன் ஒன்றிணைந்து, இடையில் மறந்துபோன போலீஸ் கடமையை சரியாக செய்து ஓவர் நைட்டில் ஹீரோவாகும் ஒரு இளைஞனின் கதைதான்...(ஸ்ஸ் அப்பா...) நம்ம தமிழ்ப்படம்!!

இந்தக் கதைக்கு (?!) இடையில் கிழிபடும் படங்களையெல்லாம் நீங்கள் முன்பே பார்த்திருந்தால் இந்தப் படம் உங்கள் வயிற்றை சிரிப்பால் புண்ணாக்குவது நூறு சதவிகிதம் உறுதி.

இந்தக் கதைக்கு ஸாரி... இந்தக் காட்சிகளுக்கென்றே அளவெடுத்து செய்யப்பட்டவர் மாதிரி அம்சமாகப் பொருந்துகிறார் சிவா. 'லாலாக்கு டோல் டப்பிமாவை' உச்சரிக்கும்போது அவர் காட்டும் உடல் மொழி... சான்ஸே இல்லை... சிரிப்பொலியில் தியேட்டரின் கூரை பிய்ந்துவிடும் போலிருக்கிறது!.

ஒரு துணுக்கை ரசித்து சிரித்து நிமிர்வதற்குள், கூடவே ஒட்டிக் கொண்டு வரும் ஒரு கொசுறு துணுக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறது. ஆனால் இவை அனைத்தும் நாம் ஏற்கெனவே பார்த்து ரசித்த காட்சிகள்தான்.

வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம்எஸ் பாஸ்கர், சண்முகசுந்தரம் கூட்டணி அதகளம் பண்ணுகிறது. அதிலும் கல்லூரி மாணவராக ஜாவா புத்தகத்துடன் சினிமாக்காரன்பட்டிக்குள் நுழையும் வெண்ணிற ஆடை மூர்த்தி வாயில் சேட்டை ஏதும் செய்யாமலேயே குபீர் சிரிப்பை வரவழைக்கிறார்.

அவர் கெட்ட வார்த்தை பேச முற்படும்போது நட்ட நடு ராத்திரியிலும் காக்கா தலையைக் கொத்த வருவது இன்னொரு லஷ்மி வெடி!

கதாநாயகி? வழக்கமான தமிழ்ப் படத்தில் அந்தப் பாத்திரத்துக்கு என்ன வேலையோ, அதே வேலைதான் இந்தப் படத்திலும் திஷா பாண்டே என்ற புதுமுகத்துக்கும்!

'அண்டர்கவர் ஆபரேஷன்' எனும் பெயரில் ரவியை போட்டுத் தள்ள சிவா உபயோகப்படுத்தும் டெக்னிக், குறிப்பாக அவர் பிரயோகிக்கும் வசனங்களை தனியாக நடந்து செல்லும்போது நினைத்தாலும் தானாக விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்... டெல்லி கணேஷ் காட்சியும் அதே ரகம்!

பாண்டிச்சேரி கடற்கரையில் 'மப்பாகி' விழுந்துகிடக்கும் போது சிவா முணுமுணுக்கும் வசனங்களை இங்கே சொல்லிவிட்டால், சுவாரஸ்யம் போய்விடும்... போய் தியேட்டரில் பார்த்து சிரித்து வயிறு புண்ணாகக் கடவது!

குறைகள்?

அதற்கென்ன... தாராளமாய் ஏராளமாய் இருக்கின்றன.

கதை என்ற எதுவுமே இல்லாமல், அதே நேரம் பழைய படங்களின் காமெடிக் காட்சிகளின் தோரணமாகவே இந்தப் படம் இருப்பதால், கடைசி வரை எந்தக் காட்சியிலும் ஒன்ற முடியவில்லைதான்.

இந்தப் படத்தில் ஏகடியம் செய்யப்படும் அத்தனை படங்களும் சிகரம் தொட்டவை... அதாவது நம்மால் சிகரத்தில் உட்கார்த்தி வைக்கப்பட்டவை. இப்போது அவற்றைத் திரும்பிப் பார்த்து நாமே சிரிக்கிறோம் என்றால்...இது ரசனையின் குறைபாடா... நமது முந்தைய ரசனைக்கு நாமே சாணி அடித்துக் கொள்கிறோம் என்றுதானே அர்த்தம்.. அல்லது இனி அந்த மாதிரி படங்கள் வந்தால் புறக்கணித்து நமது ஒஸ்தியான ரசனையையாவது காட்டுவோமா.. பார்க்கலாம்!

க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க கொஞ்சம் இழுப்பது போலத் தெரிகிறது.

ஆனால், இந்தப் படத்தில் எங்கும் ஆபாசமோ, அருவருப்போ இல்லை என்பது மிக முக்கியம். குறிப்பாக சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் பார்த்தாலும், 'அட, ரெம்ப ஓவராத்தான் போய்ட்டோமோ!' என்று கேட்டுக் கொள்வார்கள். அந்த அளவு நாசூக்காக விளாசியிருக்கிறார்கள்.

இது காமெடியா, படத்தின் தொடர் காட்சியா என்றெல்லாம் அனாவசிய கேள்வி எழுப்பாமல் இரண்டு மணிநேரம் சிரிக்க ரெடியா... கிளம்புங்க தமிழ்ப்படத்துக்கு!

Monday, January 4, 2010

எப்போதோ படித்த ஒரு புத்தகம்.

புத்தகத் தலைப்பு, ""அறியப்படாத வீரனுக்காக''. பர் ற்ட்ங் மய்ந்ய்ர்ஜ்ய் நர்ப்க்ண்ங்ழ் இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக்கொன்ற விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண் பும் மேன்மையும் தோற்றுப்போன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.

வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. ""எப்படியிருக்கிறது உன் விடு தலை?'' என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: ""வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.''

அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் - ""இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்...?'' அப் போதும் அவன் பதில் சொல்வான்: ""வலி தாங்க முடியவில்லைதான்... ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது''.

ஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் - ""நாயே... சாகப்போகிறாய்... இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா?'' உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். ""ஐயா... உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்'' என கூறிக் கொண்டே "சுடுக' என்கிறான்.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் பாட்ஷா. அதை எப்படி சுமாராக கொடுப்பது என்று ரொம்ப யோசித்து ’வேட்டைக்காரன்’ ஆக்கியிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் பாட்ஷா. அதை எப்படி சுமாராக கொடுப்பது என்று ரொம்ப யோசித்து ’வேட்டைக்காரன்’ ஆக்கியிருக்கிறார்கள்.



அப்படியே பாட்ஷா மாதிரி இருக்கு என்று சொல்லிவிடக்கூடாது என்றும் யோசித்திருக்கிறார்கள். அதனால் தெலுங்கில் ரவிதேஜா-அனுஷ்கா நடித்த விக்ரமாகுடு படத்தில் கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள். அபோகலிப்டா படத்தில் இருந்து கொஞ்சம்(என்கவுண்டரில் இருந்த தப்பிக்க அருவியில் குதிக்கும் காட்சி) சுட்டிருக்கிறார்கள்.



அப்புறம், வழக்கமாக மசாலாப்படங்களில் பார்த்து வரும் பல காட்சிகள்தான் திரைக்கதை. முப்பது வருசத்துக்கு முன்பு எடுத்த மாஸ் ஹீரோ அறிமுகமாகுற காட்சியை இன்னமும் எடுத்துக்கிட்டு இருக்குறாங்க. விஜய் அறிமுகமாகும் காட்சியும் அப்படித்தான்.



முதல் நாள் முதல் காட்சி. ஒரு பாட்டுக்கு கூட ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கவில்லை. கரிகாலன் காலப்போல....என்று பாட்டு வருவதற்குள்ளாகவே தம்மடிக்க கிளம்பிட்டாங்னா.



நான் அடிச்சா தாங்கமாட்ட..என்று விஜய் பாடுவது பொறுத்தமாக இல்லை. அவர் உடல் வாகுவிற்கு இந்த பாடலைப்பாடுவது தமாஸ் ரகம்ங்னா. இதுல வேறு அவரது மகன் அந்த பாட்டைப்பாடி கொஞ்சம் ஆடுகிறார். அவருக்கே பொறுத்தமா இல்லேன்னா இவருக்கு?

பின்னனி இசையின் போது விஜய் ஆண்டனிக்கு என்ன நடந்திருக்கும்? மனுசர் ஏன் இப்படி சொதப்பியிருக்கிறார். சண்டைக்காட்சியில் சோக கீதம் வாசிக்கிறார்.



’உலகம் எப்பவும் பயப்படுவதற்கு தயாராக இருக்கு..பயமுறுத்தவன் இருந்துகிட்டுதான் இருப்பான்’, ’இது அரசு முத்திரை..இதுல மை தடவி பேப்பர்ல குத்துங்க..மக்கள் வயித்துல அடிக்காதீங்க’, என்று நச் வசனங்கள் இருக்கு.

ஆனால் வெகு நீ..................ளமான வசனங்கள் தான் அதிகமாக இருக்கிறது.



அந்த வசனத்திற்கெல்லாம் வாயை ஆ!என்று பிளக்கிறார்கள். வசனத்திற்கு மட்டுமல்ல நிறைய காட்சிகளுக்கும் கொட்டாவி பறக்கிறது.



விஜய் ரொம்ப இளமையாக தெரிகிறார். அதனால்தான் அனுஷ்கா விஜய்க்கு அக்கா மாதிரி தெரிகிறார். ஆனால் இவரின் கிளாமர்தான் வறண்ட பாலைவனத்தில் ஆறுதலான நீறூற்று.



கொச்சின் ஹனிபா டயலாக் டெலிவரியில் கொஞ்சம் கலகலக்க வைக்கிறார். மனோபாலா சாயாஜிஷிண்டேவிடம் பேட்டி எடுத்து கலகலக்கவைக்கிறார். பள்ளித்தோழன் சத்யன் கொஞ்சம் கடிக்கிறார். கல்லூரித்தோழன் ஸ்ரீநாத் கடித்து குதறுகிறார்.








பல அட்டம்ப்ட்டுக்கு பிறகு +2வில் பாசாகி அப்புறம் காலேஜூக்கு விஜய் போகும் போதுதான் தியேட்டரே கலகலக்கிறது. ஆனால் கதைப்படி இது சீரியஸான காட்சி.



பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ ஓட்டுவது போல் இதிலும் ஆட்டோ ஓட்டுகிறார் விஜய். ரஜினி ஆட்டோ ஓட்டி தங்கைகள், தம்பியை படிக்க வைப்பார்.



இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதற்காகத்தான் விஜய் ஆட்டோ ஓட்டி அந்த வருமானத்தில் தானே படிக்கிறார்.

பாட்ஷா படத்தில் ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடலுக்கு படிக்கட்டுகளில் இருந்து ஸ்டைலாக இறங்குவார் ரஜினி. காரில் ஒரு ஓரமாக ஸ்டைலாக அமர்ந்து சாலையை லுக் விடுவார்.



இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதனால்தான் புலி உறுமுது புலி உறுமுது பாடலுக்கு படிக்கட்டுகளில் ஸ்டைலாக ஏறுகிறார் விஜய். காரில் நடுவில் அமர்ந்து லுக் விடுகிறார்.

சுழல் நாற்காலியில் பாட்ஷாவில் ரஜினி மிரட்டுவார். இதிலும் விஜய் மிரட்டுகிறார். ஆனால் காமெடித்தனமாக இருக்கிறது.

போலீஸ் அதிகாரி ஷாயாஜிஷிண்டே, வில்லன் ஜிந்தா கலக்கியிருக்கிறார்கள். தன் சின்ன வீட்டை ஜிந்தாவின் மகன் அபகரித்துவிட அதுவரை ஜிந்தாவுக்கு ஜால்ரா அடித்தவர் விஜய் பக்கம் வந்துவிடுகிறார் ஷாயாஜி.



ஏகப்பட்ட ரவுடிகள், ஏகப்பட்ட அடிதடிகள் இருந்தாலும் அரிவாள், ரத்தம் இல்லாதது ஆறுதல் (இருக்கு ஆனா இல்ல). சத்யனை கொன்று அட்டைப்பெட்டிக்குள் வைத்து அனுப்பினாலும் அவ்வளவாக நெஞ்சை பிசையவில்லை.




வேட்டைக்காரன் நல்ல கதைதான். ஆனால் வேட்டையாடிய விதம் சரியில்லை. நேர்மையான போலீஸ் அதிகாரி தேவராஜ் மாதிரி தானும் ஆகவேண்டும் என்று லட்சியம் வளர்க்கிறார் விஜய். தேவராஜ் எப்படியெல்லாம் உயர் அதிகாரி ஆனாரோ அதே மாதிரி தானும் வரவேண்டும் என்று துடிக்கிறார் விஜய். அவர் மாதிரி ஆகும் வரை பொறுத்திருக்காமல் நல்ல விசயங்களை அங்கங்கே தட்டிக்கேட்கிறார்.



ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் தேவராஜ் குடும்பத்தை அவரின் கண்ணெதிரிலேயே எரித்துவிடுகிறார்கள்.



இத்தீவிபத்தில் தேவராஜின் கண்பார்வையும் போய்விடுகிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்.



அதனால் சென்னையில் வழக்கம் போல் ரவுடியிசம் தலைதூக்கிறது. அதை தட்டி தரைமட்டமாக்கும் விஜய்க்கு ’எனக்கொரு மகன் இருந்தால் என் பதவி அவனுக்கு கிடைக்கும்.

உன்னை என் மகனாக நினைக்கிறேன். நீ இனிமேல் பதவியில் இருந்துகொண்டு தைரியமாக தட்டிக்கேள்’ என்று விஜய்க்கு பதவி கிடைக்க செய்கிறார் தேவராஜ்.க்ளைமாக்ஸ்.



பால் அபிஷேகம், சரவெடி, குதிரையில் ஊர்வலம், கரகாட்டம், கச்சேரி என்று தியேட்டருக்கு முன்பு அமர்க்களப்படுத்திய ரசிகர்கள் தியேட்டருக்குள் ஒரு சில (இடங்களைத் தவிர) கடைசி வரை கப்சிப் என்று இருந்தார்கள். கொட்டாவியின் அடுத்தகட்டத்துக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது.



அரசியல் பிரவேச நேரத்தில் அதிரடியாய் வந்து ரசிகர்களை உசுப்பேத்த வேண்டிய விஜய், ஏன்

இப்படி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றுக்கினார்.

ஓஷோ சிந்தனைகள்

மீண்டும் புல் தானாகவே வளருகிறது.

இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?

நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.

இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே இல்லை. சிந்தனைக்கு இடம் வேண்டும், வசதியான அறை வேண்டும், நிகழ் கணத்திற்குள் இடமே கிடையாது, வெறும் ‘இருத்தல்’ மட்டுமே அதில் உண்டு.
ஆகவே, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, சிந்தனை நின்று விடுகிறது. சிந்தனை அற்றது நிகழ்காலம்தான். சமய வழிப்பட்ட மனம் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது. முன்பு என்ன நடந்தது என்பது பற்றியும் நினைத்துப் பார்க்காது. கணத்திற்குக் கணம் வாழ்வது சமய வழிப்பட்ட மனம்.
ஒரு கணம் மறைந்ததும், மறு கணம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்து செல்வது அது. வருகிற ஒவ்வொரு கணத்திற்குள் வாழ்கிறவர் சமயவாதி. அவர் ஆறு போன்றவர்.
சமயவாதி, சமய மனிதர், சமய மனம் எப்போதும் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கும்; நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மிகமிக ஆழமாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவரது இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்காது. எதை நோக்கியும் அது இயங்காது. சும்மா இயங்கும் - ஏன்னென்றால் இயக்கம்தான் அதன் இயல்பு; எதார்த்தம்.
இயக்கமே எதார்த்தத்தின் இயல்பு. இயக்கம் எதார்த்தமாய் இயங்குகிறது. நதி நீரில் மிதப்பவரைப் போல, அவர் கால நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்பவர். ஒவ்வொரு கணமும் அவர் உயிர் வாழ்பவர்; ஒவ்வொரு கணமும் இயங்கிக் கொண்டிருப்பவர்.
அவர் ஒன்றுமே செய்வதில்லை. அவர் அந்தக் கணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
அந்த வினாடி நகர்ந்ததும், அடுத்த வினாடி வந்து விடுகிறது. அதிலும் அவர் வாழ்கிறார்.
**

இயற்கையாக, அமைதியாக உள்நோக்கியபடி வாழுங்கள், நீங்க நீங்களாக, தனிமையாக, அமைதியாக உங்கள் மன ஓட்டத்தை கவனித்தவாறு சிறிது நேரம், தினசரி இருக்க முயற்சி செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் எண்ண அலைகள் குறைய ஆரம்பிக்கும். ஒரு நாள், உங்கள் மனம் அமைதியாகி எண்ணம் அனைத்தும் நின்றுவிடும். அந்த அமைதியில், நிசப்தத்தில் மனம் காணாமல் போய்விடும். அப்பொழுது நீங்கள் அங்கே இருக்கமாட்டீர்கள். அதுவுரை நீங்கள் என்று கருதி வந்தது உங்கள் மனதைத்தான் என்பதை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள்.
**
ஞானத்திற்கும் அப்பால்
வாழ்க்கை மீண்டும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் என்பது நிச்சயமில்லை. இந்தமுறை அது ஏன் தரப்பட்டுள்ளது என்பதில் கூட நிச்சயமில்ல. நீ அதற்குத் தகுதியானவனா? அதை நீ சம்பாதித்திருக்கிறாயா? உயிர் வாழ்தல் அதை உனக்கு கொடுக்கக் கடமை பட்டுள்ளதா? அது ஒரு சுத்தமான பரிசு, உயிர் வாழ்தலின் அதிகமான நிறைவின் மூலம் வரும் பரிசு. நீ அதற்குத் தகுதியானவனா இல்லையா என்றெல்லாம் அது கவலைப்படுவதில்லை. அது உனது தகுதிகளை பற்றிக் கேள்வி கேட்பதில்லை. உனது நன்னடத்தை ஒழுக்கம் இவை பற்றி விசாரிப்பதில்லை. உன் மீது எந்த வேண்டுகோளையும் விதிப்பதில்லை, எந்தவிதமான விதிமுறைகளும் இன்றி வெறுமனே அது உனக்குத் தரப்படுகிறது. இந்தப்பரிசு ஒரு வணிகரீதியானது அல்ல. உன்னிடம் எந்தவித எதிர்ப்பார்ப்புகளையும் அது பதிலுக்குக் கேட்பதில்லை. உன்னிடம் அதை கொடுத்து நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று முழு சுதந்திரத்தையும் அது அனுமதிக்கிறது.
**
கடவுள் தன்மை
"ஒரு மரத்துக்கு அருகில் சென்று, அதனுடன் பேசுங்கள்(யாரும் பார்க்காதபோது). அதைத் தொட்டுத் தழுவிக்கொள்ளுங்கள். அதை உணர்வுடன் சந்தியுங்கள். அதன் அருகில் உட்கார்ந்து அந்த மரமும் உங்களை உணரச் செய்யுங்கள். அது உங்களை,"நீங்கள் மிகவும் நல்லவர். எந்தக் கெடுதலும் எண்ணாதவர்!" என்று உணரட்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த நட்பு அதிகரிக்க, நீங்கள் எப்பொழுதெல்லாம் அதன் அருகில் வருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் அதன் தன்மையில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.
நீங்கள் தொடும்பொழுதெல்லாம் ஒரு குழந்தையைப்போல குதூகலம் அடையும். நீங்கள் அருகில் உட்கார்ந்திருக்கும் போதெல்லாம் அதன் சிநேகத் தன்மையை உணர்வீர்கள். நீங்கள் துக்கமான மன நிலையில் அதன் அருகில் வரும்போதெல்லாம் துக்கம் மறைந்து போவதை உணர்வீர்கள்.அப்போதுதான் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
நீங்கள் அந்த மரத்தை மகிழ்ச்சி அடையச் செய்யலாம். அதுபோல, அந்த மரமும் உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும்! வாழ்க்கை முழுக்கவும் ஒருவரை ஒருவர் நேசித்து, சார்ந்து இருப்பதை உணர்வீர்கள்.இந்த சார்புடைய தன்மையைத்தான், நான் கடவுள் தன்மை என்று அழைக்கிறேன்."
**
நீ உன் தந்தையை மதிக்க கற்பதற்க்குள், உன்னை மதிக்காத ஒரு ஜீவன் இவ்வுலகில் வந்து விடுகிறான்
**
பற்று என்பது கட்டுப்பாட்டிற்கான ஒரு காரணம் என்றால், பின்னர் பற்றற்றருப்பதுதான் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்.
எதிர்பார்ப்புகள்தான் உன்னை துக்கத்தில் அழ்த்துகின்றன என்றால் பின்னர் எதிர்பாராமை உன்னை துக்கமின்மைக்கு அழைத்துச்செல்லும்.
கோபம் உன்னுள் ஒரு நரகத்தை ஏற்ப்படுத்தினால், அதற்கு எதிரான் கருணை உன்னுள் ஒரு சொர்க்கத்தை எற்படுத்தும்.
உனது துன்பத்திற்கு எது காரணமோ, அதற்கு எதிரானதுதான் சந்தோஷத்திற்கான் காரணமாகும்.
ஆகவே கட்டுப்பாடுகளை நீக்க மனித விழிப்புணர்வின் முடிச்சுகள் எவ்வாறு உள்ளன என்பதை முதலில் நீ புரிந்து கொள்ள வேண்டும்.
**
சத்தியம் நீந்துவதனால் அல்ல - மூழ்குவதனாலேயே கண்டடையக் கூடியது. நீந்துதல் ஒரு மேல்மட்ட நிகழ்ச்சி. ஆனால், மூழ்குதல் என்பது உன்னை முடிவில்லாத ஆழங்களுக்கு எடுத்துச் செல்வது
**
அதிக புழக்கத்திலிருக்கும் நாணயம் தேய்ந்து தேய்ந்து செல்லாக் காசாகிவிடுவது போல், அதிக புழக்கத்திலிருக்கும் சொற்கள் நாளடைவில் அதன் உண்மையான அர்த்தத்தை இழந்துவிடுகிறது
**
தனியாக இருக்க எவரும் விரும்புவதில்லை. அவருக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்! நண்பர்கள் தேவைப்படும்வரை அவர் சரியான நண்பராக இருக்க முடியாது. ஏனென்றால் தேவை என்பது மற்றவரை ஒரு பொருளாக தாழ்த்தி விடுகிறது. தனித்திருக்க எவரால் முடியுமோ அவர் மட்டுமே நண்பராயிருக்கவும் முடியும். நட்பு- அது அவர் தேவை அல்ல. அவரது மகிழ்ச்சி.
**
வாழ்க்கை மீண்டும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் என்பது நிச்சயமில்லை. இந்தமுறை அது ஏன் தரப்பட்டுள்ளது என்பதில் கூட நிச்சயமில்ல. நீ அதற்குத் தகுதியானவனா? அதை நீ சம்பாதித்திருக்கிறாயா? உயிர் வாழ்தல் அதை உனக்கு கொடுக்கக் கடமை பட்டுள்ளதா? அது ஒரு சுத்தமான பரிசு, உயிர் வாழ்தலின் அதிகமான நிறைவின் மூலம் வரும் பரிசு. நீ அதற்குத் தகுதியானவனா இல்லையா என்றெல்லாம் அது கவலைப்படுவதில்லை. அது உனது தகுதிகளை பற்றிக் கேள்வி கேட்பதில்லை. உனது நன்னடத்தை ஒழுக்கம் இவை பற்றி விசாரிப்பதில்லை. உன் மீது எந்த வேண்டுகோளையும் விதிப்பதில்லை, எந்தவிதமான விதிமுறைகளும் இன்றி வெறுமனே அது உனக்குத் தரப்படுகிறது. இந்தப்பரிசு ஒரு வணிகரீதியானது அல்ல. உன்னிடம் எந்தவித எதிர்ப்பார்ப்புகளையும் அது பதிலுக்குக் கேட்பதில்லை. உன்னிடம் அதை கொடுத்து நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று முழு சுதந்திரத்தையும் அது அனுமதிக்கிறது.
**
நீங்கள் பிறக்கும் பொழுது, மனமற்று , ஒரு யோகியாகவே பிறக்கிறீர்கள், அதேபோல் நீங்கள் இறக்கும் பொழுதும், மனமுற்று, ஒரு யோகியாகவே இறக்க வேண்டும்.
**
சிலவற்றைப் பார்க்கையில் அழகாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் உங்களுக்குள் இருக்கும் மற்றொரு அழகான விஷயத்தை அது ஒத்திருக்கிறது.
**
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை. நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும்.

பிரபலமான 300 மென்பொருட்கள்

.Office

OpenOffice - office suite
PC Suite 602 - office suite
AbiWord - text editor
Atlantis Nova - text editor
Microsoft PowerPoint Viewer - power point files viewer
Adobe Reader - pdf reader
Foxit PDF Reader - pdf reader
PDFCreator - create pdf documents
Doc Convertor - document convertor
Convert - unit convertor
Converber - unit convertor
Sunbird - calendar/organizer
EssentialPIM Free - calendar/organizer
PhraseExpress - speed up your writing
ATnotes - create notes on the desktop

Archive managers

7-Zip - compression program
IZArc - compression program
TugZIP - compression program
CabPack - compression program
Universal Extractor - extract files from any type of archive

Internet

Firefox - web browser
Internet Explorer- web browser
Maxthon - web browser
Opera - web browser
Avant Browser - web browser
Thunderbird - email client
PopTray - check for emails
Free Download Manager - download manager
FlashGet - download manager
WellGet - download manager
Download Master - download manager
WGET - commandline download manager
HTTrack - offline browser
WebReaper - offline browser
Yeah Reader - RSS reader
GreatNews - RSS reader
RSSOwl - RSS reader

P2P

µTorrent - torrent client
Azureus - torrent client
BitComet - torrent client
ABC - torrent client
BitTornado - torrent client
eMule - p2p client
SoulSeek - p2p client
Shareaza - p2p client
DC++ - Direct Connect network client
PeerGuardian - IP blocker

Chat

Miranda - chat client
MSN Messenger - chat client
Yahoo Messenger - chat client
QIP - chat client
Gaim - chat client
JAJC - chat client
HydraIRC - IRC client
Talkative IRC - IRC client
IceChat - IRC client
Skype - VOIP client
Google Talk - VOIP client
VoipStunt - VOIP client
Gizmo - VOIP client
Wengo - VOIP client

Security

AVG Free - antivirus
Avast Home Free - antivirus
AntiVir PersonalEdition - antivirus
BitDefender Free - antivirus
ClamWin - antivirus
CyberDifender - Internet Security Suite
Ad-aware - anti-spyware
Spybot: Search & Destroy - anti-spyware
Windows Defender - anti-spyware
SpywareBlaster - anti-spyware
Spyware Terminator - anti-spyware
Tootkit Reveaker - rootkit detection utility
Winpooch - system protection
HiJack Free - system protection
HighJackThis - hijackers detector and remover
Kerio Personal Firewall - firewall
Sygate Personal Firewall - firewall
ZoneAlarm - firewall
AxCrypt - file encryption
Simple File Shredder - securely delete files
PuTTy - SSH client
KeePass - password manager
LockNote - password manager
nPassword - password manager
Microsoft Baseline Security Analyzer - identify security misconfigurations

Network

Hamachi - VPN client
RealVNC - remote control
UltraVNC - remote control
Ethereal - local area network administration
The Dude - network administration
Wireshark - network administration
Angry IP Scanner - IP scanner
IP-Tools - IP scanner
Free Port Scanner - IP scanner
NetMeter - network bandwidth monitoring

Servers

FileZilla - FTP client
FileZilla Server - FTP server
EFTP - FTP client/server
XAMPP - integrated server package of Apache, mySQL, PHP and Perl
WAMP - Apache, PHP5 and MySQL server

Audio

Foobar2000 - audio player
WinAmp - audio player
1by1 - audio player
JetAudio - audio player
XMPlay - audio player
Xion - audio player
Apollo - audio player
MediaMonkey - music organizer
The GodFather - music organizer
dBpowerAMP - audio converter
Audacity - audio converter
WavePad - audio converter
Kristal Audio Engine - audio editor
Exact Audio Copy - CD ripper
Audiograbber - CD ripper
CDex - CD ripper
Mp3 Tag Tools - tag editor
Mp3tag - tag editor
Taggin’ MP3 - tag editor
Monkey’s Audio - APE compressor/decompre ssor
mpTrim - mp3 editor
WavTrim - wave editor
EncSpot Basic - analyse mp3 files

Video

Windows Media Player - audio/video player
VLC - video player
Media Player Classic - video player
MV2Player - video player
CrystalPlayer 1.95 - video player
Zoom Player - video player
GOM Player - video player
viPlay - video player
DSPlayer - video player
VirtualDub - video editor
CamStudio - video screen recording
AviSplit - Avi splitter
Video mp3 Extractor - rip audio from video files
Free iPod Converter - convert all popular video formats to iPod video
MediaPortal - turning your PCinto a Media Center
The FilmMachine

Image

Gimp - image editor
PhotoFiltre - image editor
Paint.net - image editor
ArtRage - image editor
Artweaver - image editor
IrfanView - image viewer
Picasa - image viewer
XnView - image viewer
FastStone Image Viewer - image viewer
FuturixImager - image viewer
Easy Thumbnails - create thumbnails from images
JoJoThumb - create thumbnails from images
iWebAlbum - create web photo albums
JAlbum - create web photo albums
3D Box Shot Maker - design quality box shot
FastStone Capture - screen capture
WinSnap - screen capture

3D

Blender3D - 3D renderer
3Delight Free - 3D renderer
SketchUp - 3D modeling
Maya Learning Edition - 3D modeling

Developers

AutoIt - task automation
SciTE4AutoIt3 - text editor for AutoIt
AutoHotkey - task automation
PHP Designer - PHP editor
Notepad++ - text editor
ConTEXT Editor - text editor
PSPad - text editor
FoxEditor - text editor
Crimson Editor - source code editor
Elfima Notepad - text editor
Notepad2 - text editor
Nvu - HTML editor
Alleycode - HTML editor
BlockNote - web page editor
Weaverslave - web page editor

CD/DVD

DeepBurner - CD/DVD burner
CDBurner XP Pro - CD/DVD burner
BurnAtOnce - CD/DVD burner
Express Burn - CD/DVD burner
Zilla CD-DVD Rip’n’Burn - CD/DVD burner
ImgBurn - ISO, BIN burner
Daemon tools - virtual CD/DVD
DVD Decrypter - DVD ripper
DVD Shrink - DVD ripper
Nero CD-DVD Speed - CD/DVD info and quality test

Codecs

GSpot - codec information
AC3Filter - audio codec
Xvid - video codec
QuickTime Alternative - video codec
Real Alternative - video codec
K-Lite Codec Pack - all codecs

System Ulilities

CCleaner - system cleaner
xp-AntiSpy - OS setup
jv16 Powertools - system utilities
XP SysPad - system monitoring utility
What’s Running - process guard
Registrar Lite - registry editor
WinIPConfig - replacement for “ipconfig.exe” and “route.exe”
Unlocker - file eraser
Eraser - secure file eraser
Undelete Plus - file recovery
freeCommander - file manager
ExplorerXP - file manager
Duplicate File Finder - find all duplicate files
Ant Renamer - file renaming
ReNamer - file renaming
Icons From File - icos extractor
Chaos MD5 - MD5 generator
HashTab - MD5, SHA1 and CRC-32 file hashes
Rainlendar Lite - desktop calendar
Weather Watcher - weather firecast
Subtitle Workshop - subtitles editor
Ant Movie Catalog - movie organizer
Disclib - CD organizer
Dexpot - virtual desktops
DriveImage XML - create partition images
MozBackup - backup and restore bookmarks, etc.
SyncBack - system backup
Atomic Cock Sync - syncronize your clock
Citrus Alarm Clock - alarm clock
TaskSwitchXP - Alt-Tab replacement
Launchy - application launcher
allSnap - make all windows snap
Sysinternals Tools - various system tools
StrokeIt - mouse gestures
Net Profiles - create profiles of your network settings
ResourceHacker - view, modify, rename, add, delete
Java Runtime Environment - java for Windows

UI Enhancements

RocketDock - application launcher
AveDesk - desktop enhancer
IconPhile - customize windows’s system icons
CursorXP Free - change mouse cursors
MacSound - volume control
LClock - Windows Longhorn clock
Y’z Dock - application launcher
Y’z Shadow - shadow effect to the windows
Y’z Toolbar - change the toolbar icons in Explorer and Internet Explorer
Taskbar Shuffle - rearrange the programs on the taskbar by dragging
Visual Task Tips - thumbnail preview image for each task in the taskbar
Badges - put badges on any folder or file
Folderico - change icons of the folders
Folder Marker - mark your folders
Folder2MyPC - add favourite locations to My Computer
Microsoft TweakUI - system settings
BricoPacks - shell packs
ShellPacks - shell packs
Tango Shell Patcher - shell patcher
XPize - GUI enhancer
Vista Transformation Pack - complete visual style
Vista Sound Scheme - Windows Vista sound scheme
Royale Theme - visual style

Hardware monitoring/Benchmar king

CPU-Z - cpu information
CrystalCPUID - cpu information
Central Brain Identifier - cpu information
Everest - system information
SiSoft Sandra - system information
SpeedFan - hardware monitor
Memtest86 - memory test
PowerMax - HDD test
3Dmark 06 - 3D game performance benchmark
Aquamark - performance benchmark
rthdribl - 3D benchmark
Fraps - 3D benchmark, fps viewer and screen recorder
Prime 95 - cpu benchmarking
SuperPI - cpu benchmarking
CPU Rightmark - cpu overclock
Core Temp - cpu temperature
ATiTool - video overclock
ATI Tray Tools - Radeon tweaker
aTuner - GeForce and Radeontweaker
RivaTuner - video overclock
Nokia Monitor Test - monitor adjustmets
UDPixel - fix dead pixels

Games

123 Free Solitaire - solitaire games collection
Arcade Pack - classic arcade games
Live For Speed - online racing simulator
Enigma - puzzle game
Freeciv - multiplayer strategy game
Tux Racer - race down steep, snow-covered mountains

Education

SpeQ Mathematics - mathematics program
Dia - diagram creation program
Google Earth - explore the world
NASA World Wind - 3D virtual globe
Celestia - explore the space
Stellarium - planetarium

Miscellaneous

nLite - Build your own custom Windows disk.
VirtualPC - create virtual machines
grabMotion - webcam capture
iDailyDiary - simple page-for-a-day diary
Pivot Stickfigure Animator - create stick-figure animations
Wink - create presentations
Scribus - professional page layout
FreeMind - midn mapping software
Windows Live Writer - WYSIWYG blog authoring

கர்ணனைப் பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம் - படித்திருக்கலாம் இதோ ஒன்று

கர்ணன்
வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த
புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன்.
தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும்
கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.

அங்கு சென்று சகல
வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும்
வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு
அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான்
எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை -
எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.

தலைவனோ - கர்ணா நீ
பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும்
தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் -
எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.

கர்ணனுக்கு
அன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது
வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு
என்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள்
காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.

கர்ணனுக்கு
ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது என
ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை
வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.

ஒன்றும் புரியாத கர்ணன்
- இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா
- நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு
அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி
விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் -
நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை
உணர்ந்தான்.

பதிவர்களே - நாமும் பிறந்த நாள் - திருமண நாள் - என்று
கொண்டாடும் போதெல்லாம் - முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் - அனாதை
இல்லங்களில் வாழ்பவர்கள் - வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால்
அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும்
புண்ணியத்தைனையும் தரும் .

வாருங்கள் அன்ன தானம் செய்வோம்